Published : 22 Nov 2019 08:07 PM
Last Updated : 22 Nov 2019 08:07 PM

மனைவிக்கு கொலை மிரட்டல்; முன்னாள் திமுக எம்எல்ஏக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவாரூர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன். சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மனைவி, ஹேமா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அசோகன் தனது முதல் மனைவி சிந்துஜா உடன், தனியே வசித்து வருகிறார்.

இந்த நிலையில் 2015, டிசம்பர், 6-ம் தேதி, தனது கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றுள்ளார் ஹேமா. உதவிப் பொருள்களை வழங்கிவிட்டு வீட்டிற்கு வர, இரவு 11:00 மணி ஆகி உள்ளது. அப்போது, மது போதையில் இருந்த அசோகன், ஹோமா மீது சந்தேகப்பட்டு, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஹேமா, அவரது தாயார் இருவரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு, தன் கைத்துப்பாக்கியால் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ஹேமா தனது தாயாரை அழைத்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

அப்போது இரண்டு முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதாக பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் ஹேமா அளித்த புகாரின்பேரில் அசோகன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜெ.சாந்தி முன் நடந்தது. அனைத்து தரப்பு சாட்சிகளும், வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் அசோகனுக்கு எதிரான குற்றசாட்டுக்கள் காவல் துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது எனவே குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

தண்டனை விபரம், 3ஆண்டுகள் சிறை, வழக்கு பிரிவு 509 கீழ் - 6மாத சிறை, 1000 ரூ அபராதம். வழக்கு பிரிவு 307 - 3ஆண்டு சிறை, 10ஆயிரம் அபராதம். அனுமதியின்றி துப்பாக்கி பயன்படுத்தியதற்கு- 6 மாத சிறை.ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

வழக்கில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்திவைக்க அசோகன் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை ஏற்று, தண்டனை காலத்தை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஒரு மாத காலத்திற்குள் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற இது உதவும். இதன்மூலம் அசோகன் இனி 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x