Last Updated : 22 Nov, 2019 05:24 PM

 

Published : 22 Nov 2019 05:24 PM
Last Updated : 22 Nov 2019 05:24 PM

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்து விவகாரம்; தமிழக அரசின் மவுனம் ஆபத்தானது: டாக்டர்கள் சங்கம் விமர்சனம்

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, எதையும் செய்யாமல் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

மாநில அரசுகள் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் இதர பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2007-ம் ஆண்டு முதல் கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக் கல்வி இடங்களில், முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் சேர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு, மிக அதிகமாக 10 சதவீத இட ஒதுக்கீடு, அவசர அவசரமாக வழங்கப்படுகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்டோர் மிக மோசமான பாதிப்புக்கு, இழப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அகில இந்தியத் தொகுப்பில், இளநிலை முதுநிலை, மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டை 52 சதவீதமாக, இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை ரத்து செய்ய வேண்டும். உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோரை பாதிக்கும் மிக முக்கியப் பிரச்சினையில் தமிழக அரசு, எதையும் செய்யாமல் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்து, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிக்கத் தயார் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த அக்.31 அன்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் , மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஏமாற்றுவது நேர்மையற்ற செயலாகும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்ட அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள், இட மாறுதல்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாறுதல் செய்து, அந்த இடங்களில் வேறு மருத்துவர்களை நியமனம் செய்ததில் , ஊழல்கள் முறைகேடுகள் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இடமாறுதல்களுக்காக லஞ்சம் பெற்றோர் மற்றும் கொடுத்தோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போராட்டத்தைக் கைவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என, தான் அளித்த வாக்குறுதியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மீறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது”.

இவ்வாறு ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x