Published : 22 Nov 2019 04:36 PM
Last Updated : 22 Nov 2019 04:36 PM

பொன்.மாணிக்கவேல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

தமிழக அரசு மீது சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்புக்கு த் தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு வரும் நவம்பர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், அந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூசண் தலைமையிலான அமர்வில் தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முறையிட்டார்.

அப்போது உச்ச நீதிமன்ற அமர்வு , “தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது குறித்தும், அந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் அமர்விடம் தெரிவியுங்கள்” என அறிவுறுத்தியது.

மேலும், ஒருவேளை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 25-ம் தேதி அந்த அவமதிப்பு வழக்கை விசாரித்தால், நாங்கள் தமிழக அரசு தொடர்ந்த மனுவை 26-ம் தேதி விசாரிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து தமிழக அரசுத் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x