Published : 22 Nov 2019 02:46 PM
Last Updated : 22 Nov 2019 02:46 PM

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் மரண விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவந்தன. தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், பேராசிரியர்கள் துன்புறுத்தலே மகள் மரணத்துக்குக் காரணம் என்றும் அவரது தந்தை லத்தீஃப் புகார் அளித்திருந்தார்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கில் நேரில் விசாரணை நடத்திய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட்டார். அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ அல்லது தன்னாட்சி பெற்ற அமைப்பு மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், ''வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மத்திய குற்றப் பிரிவில் சிபிஐயில் பணியாற்றி அனுபவம் பெற்ற 2 அதிகாரிகள் உள்ளனர் ஆகவே வழக்கு விசாரணை உரிய முறையில் நடக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டது. அதை நீதிபதிகள் அமர்வு பதிவு செய்துகொண்டது.

மனுதாரர் தரப்பில், “ வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து பாத்திமாவின் தந்தையும் சந்தேகத்துடன் பேட்டி அளித்துள்ளார். வழக்கு விசாரணையை மாற்றக்கோரி கடந்த 18-ம் தேதி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் அனுப்பிய மனுவிற்கு எந்த பதிலும், நடவடிக்கையும் இல்லை.

தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிடக் கோரி வழக்கைத் தொடர்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மனு எப்போது கொடுக்கப்பட்டது? அதற்கு ஒப்புகைச் சீட்டு எதுவும் வழங்கப்பட்டதா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

கடந்த 18-ம் தேதி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் கொடுக்கப்பட்டது. அனுப்பிய மனுவிற்கு எந்த பதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தான் வழக்குத் தொடர்ந்துள்ளோம். அதனால்தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம், என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x