Published : 22 Nov 2019 01:54 PM
Last Updated : 22 Nov 2019 01:54 PM

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணை சட்ட விரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்யக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் பதில்மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

கோயில் நிலங்களைப் பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோயில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும்.

கோயிலுக்குத் தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோயிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் மீண்டும் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிப்பாட்டுத் தலங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாதா? இந்த அரசாணை மூலம் கோயில் நிலங்களை விற்க அறநிலையத் துறையை அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோயில்களுக்குப் பலனை அளிக்கும்? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் தொடர்பான விவரங்களை இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசாணைக்குத் தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x