Published : 21 Nov 2019 02:23 PM
Last Updated : 21 Nov 2019 02:23 PM

புதிய கல்விக்கொள்கை அல்ல; புதிய புல்டோசர் கொள்கை: மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு

புதிய கல்விக்கொள்கை குறித்து எத்தனை மாநிலங்களில் விவாதம் நடத்தினீர்கள் என வைகோ மாநிலங்கவையில் கேள்வி எழுப்பினார். இதனால் அவருக்கும் மாநிலங்களவைத் தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று (21.11.2019) மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்வி வந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுந்து அதில் குறுக்கிட்டார்.

அப்போது அவைத்தலைவரைக் குறிப்பிட்டு வைகோ பேசும்போது, ''நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது.

இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை'' என்று விமர்சித்தார்.

அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உங்கள் கேள்விக்கு வாருங்கள் எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய வைகோ, “நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம்” என்று பொதுவாகச் சொன்னார். அப்போது இடைமறித்த வைகோ, “எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே” எனக் கேட்டார்.

அப்போது இடைமறித்த அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, “உங்கள் வாய்ப்பு முடிந்துவிட்டது. நீங்கள் மூத்த உறுப்பினர். இதற்கு மேல் கேட்கக்கூடாது” என்று வைகோவை அமரச் சொன்னார்.

அதற்கு பதிலளித்த வைகோ, “ உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே” எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் விவாதம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x