Last Updated : 21 Nov, 2019 01:00 PM

 

Published : 21 Nov 2019 01:00 PM
Last Updated : 21 Nov 2019 01:00 PM

ஜம்மு காஷ்மீர் பிரிவு; மக்களவையில் குரல் எழுப்பியும் தடுக்க முடியவில்லை: மன்னிப்பு கோரும் கனிமொழி

மக்களவையில் குரல் எழுப்பியும் ஜம்மு காஷ்மீர் பிரிவைத் தடுக்க முடியாததற்கு மன்னிப்பு கோருவதாக, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி கூட்டாட்சியிலுள்ள சவால்கள் தொடர்பாக தேசியக் கருத்தரங்கு புதுச்சேரியில் இன்று (நவ.21) தொடங்கியது. இக்கருத்தரங்கில் முதல்வர் நாராயணசாமி, கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

"ஒரே மொழி தொடங்கி பல விஷயங்களிலும் 'ஒரே' என்ற சித்தாந்தத்தை நோக்கிச் செல்கிறது. பிரச்சினைகளுக்கான விவாதம் என்ற நிலை மாறி மவுனம் என்பதை நோக்கி அனைத்துத் தரப்பினரும் செல்லத் தொடங்கியுள்ளனர். அனைத்துத் தரப்பினரின் மவுனமான அமைதி பயமாக இருக்கிறது. அனைத்திலும் 'ஒன்று' என்ற நிலை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறது.

ஜம்மு காஷ்மீர் பிரிவைத் தடுக்க முடியவில்லை. மக்களவையில் குரல் எழுப்பியும் அதைச் செய்ய முடியவில்லை. இதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளைப் பார்க்கும்போது நன்றாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனைதான் கிடைக்கும் என்பதுபோல் உள்ளது. குறிப்பாக தமிழகம், கேரள மாநிலங்கள் அதிக பாதிப்பு அடையும்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவமே திமுகவின் செயல்பாடு. அதை நோக்கி குரல் எழுப்புகிறோம். ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக திமுகவை காட்டும் போக்கையும், சிக்கலையும் உருவாக்குகிறார்கள்.

ஜிஎஸ்டி வரி வருவாயை எடுத்துக்கொண்டு, அதற்கான மாநில அரசுகளின் பங்குகளைத் தராதது ஒருபுறம் உள்ளது. அதேபோல் மக்களவை உறுப்பினர்களுக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் பணி முடித்தோருக்கு நிதியைத் தர முடியாத சூழல் நிலவுகிறது.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி முறையால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

மாநிலங்களின் உரிமை, நிதிப் பறிப்பு ஆகியவற்றையும் தாண்டி மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைச் செயல்படுத்தும் போக்கில் உள்ளது. அதற்கு உதாரணமே ஜம்மு காஷ்மீர் பிரிப்பு. எதுவும் நாட்டில் நடக்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. தற்போது நமது உரிமை நோக்கிய விவாதங்கள் நோக்கி நமது பயணம் தற்காலத்தில் மாறுவது அவசியம்".

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x