Published : 21 Nov 2019 12:48 PM
Last Updated : 21 Nov 2019 12:48 PM

ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்: அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான ராபர்ட் பயஸுக்கு, மகனின் திருமணத்துக்காக 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் ராபர்ட் பயஸ். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் இவர், தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ராபர்ட் பயஸின் மனு சிறைத்துறையின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (நவ.21) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ளவும், பரோல் நாட்களில் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கவோ, அரசியல் தலைவர்களைச் சந்திக்கவோ கூடாது என்பது உள்ளிட்ட சிறை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x