Published : 04 May 2014 08:57 AM
Last Updated : 04 May 2014 08:57 AM

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் சனிக்கிழமை புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்துகிறது. பகலில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். இன்று கத்தரி வெயில் தொடங்குவதால், அடுத்த ஒரு மாதத்தை எப்படி சமாளிப்பது என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது, மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக பரவலாக மழை பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது, மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.

கன மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் கன மழையும் மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யலாம்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தைக் கடந்து அரபிக் கடல் நோக்கி நகரும். காற்றழுத்தம் காரணமாக மழை பெய்தால், தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் சற்று குறையும். எனினும் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு வெப்பம் அதிகரிக்கும்.

தமிழகத்தில் சனிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ராமநாதபுரம், கமுதியில் 7 செ.மீ., சிவகிரி, உதகை, தக்கலை ஆகிய இடங்களில் 6 செ.மீ., கன்னியாகுமரியில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் வேலூரில் 104 டிகிரி, தருமபுரியில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் வெப்ப நிலை 98 டிகிரியாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு ரமணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x