Published : 21 Nov 2019 11:54 AM
Last Updated : 21 Nov 2019 11:54 AM

ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் வந்த 6 மாதக் குழந்தை உயிரிழப்பு: சென்னை வந்த தம்பதிக்கு நிகழ்ந்த சோகம்

ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த தம்பதி தங்களது 6 மாதக் கைக்குழந்தையுடன் சொந்த ஊர் திரும்பிய நிலையில், விமானப் பயணத்தினால் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலையூர், வேங்கைவாசல், வேலவன் காலனியைச் சேர்ந்தவர் சக்தி முருகன் (32). இவரது மனைவி கீதா (29). இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஹ்ரித்திக் என்கிற 6 மாதக் கைக்குழந்தை இருந்தது.

சக்திமுருகன், கீதா, அவரது தாயார் பிரிட்டோ குயின் ஆகியோர் விடுமுறையை முன்னிட்டு சென்னை வந்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து AK13 Air Asia விமானத்தில் பயணம் செய்த அவர்கள் ‌மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் வழியாக நேற்றிரவு 12.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களது குழந்தை ஹ்ரித்திக்கும் உடன் வந்தது. 13 மணிநேரப் பயணத்தில் குழந்தை சுய நினைவை இழந்துள்ளது. குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அனைவரும் நினைத்துள்ளனர். சென்னையில் இறங்கியதும் குடியுரிமை சோதனை முடித்து தங்களின் உடமைகளை சக்திமுருகன் குடும்பத்தினர் எடுத்துக்கொண்டனர். அப்போது குழந்தை ஹ்ரித்திக் விழிக்காமல் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து சோதித்தபோது குழந்தை சுயநினைவு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக பன்னாட்டு வருகைப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சோதனை செய்ததில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக குழந்தை உயிரிழந்தது சம்பந்தமாக விமான நிலையக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை பல மணிநேரம் பயணம் செய்ததால் மூச்சுத்திணறல் அல்லது ஒவ்வாமை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். குழந்தையின் இறப்பு குறித்து பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x