Published : 21 Nov 2019 09:27 AM
Last Updated : 21 Nov 2019 09:27 AM

அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கினால் வருமானவரி விலக்கு: பள்ளி வளர்ச்சிக்கு உதவ தமிழக அரசு அழைப்பு 

சென்னை

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக் காக நடப்பு ஆண்டில் ரூ.28,757 கோடியை தமிழக அரசு ஒதுக்கி யுள்ளது. அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கினாலும் அரசுப் பள்ளிகள் தரத்தை மேம்படுத்த அனைவரும் உதவ முன்வர வேண்டும்.

அவ்வாறு உதவி செய்ய விரும்பவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேக இணையதளம் (https://contribute.tnschools.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் முன்வந்து அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அழைப்பு விடுக்கிறோம்.

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் நல்ல உள்ளங்கள், மேற்கண்ட இணையதளத்தின் மூலம் எந்தப் பள்ளிக்கு நிதியுதவி வழங்க விருப்பமோ வழங்கலாம். அவர்கள் வழங்கும் நிதியின் மூலம் நடைபெறும் பணிகளையும் அந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

எல்லாப் பணிகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். நிதியுதவி அளிப்பவர்களுக்கு உடனடி பற்றுச் சீட்டு வழங்கப்படும். அதைக் கொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அந் தொகைக்கு உரிய வருமானவரி விலக்கையும் பெறலாம். அரசின் பணியோடு மக்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறப்படையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x