

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.
2009-ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்று ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபய ராஜபக்சதான்.
அவர் செய்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி அதை அன்றைய இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதிபராக கோத்தபய தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கோத்தபயவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 23-ம் தேதி சென்னையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.