Published : 20 Nov 2019 04:21 PM
Last Updated : 20 Nov 2019 04:21 PM

தாயைப் பழித்ததால் தாய்மாமனைக் கல்லால் தாக்கிக் கொன்ற தனயன்

சென்னை

மது அருந்திவிட்டு அடிக்கடி தாயையும் தனது குடும்பத்தையும் ஆபாசமாகத் திட்டியதால், தாய்மாமனைக் கருங்கல்லால் தாக்கி, கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆலந்தூர், ஆசர்கானா பகுதியில் வசிப்பவர் சௌந்தரராஜன் (60). இவரது மனைவி சரஸ்வதி (54). இவர்களது மகன் கோகுல்ராஜ் (31). பூந்தமல்லியில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் கோகுல்ராஜ் பணிபுரிகிறார். சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் (எ) அப்புன் (60).

எத்திராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மது அருந்திவிட்டால் தங்கை சரஸ்வதி மற்றும் அவரது குடும்பத்தாரைத் தெருவில் நின்று கண்டபடி திட்டுவது அவரது வழக்கம். இதைப் பலமுறை கோகுல்ராஜ் கண்டித்துள்ளார். தாய்மாமனாக இருந்தாலும், மற்றவர்கள் எதிரில் தனது குடும்பத்தை அவ்வப்போது மது அருந்திவிட்டு திட்டுவதால் அவமானமடைந்த கோகுல்ராஜ் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

வழக்கம்போல் மது அருந்திய எத்திராஜ் நேற்றிரவு 12 மணியளவில் தனது தங்கை வீட்டுக்கு வந்தவர் சாலையில் நின்று தனது தங்கை சரஸ்வதியை ஆபாசமாகப் பேசித் திட்டியுள்ளார். குடும்பத்தையும் அவதூறாகப் பேசியுள்ளார். தாயை ஆபாசமாகத் திட்டியதாலும், குடும்பத்தை அவதூறாகத் திட்டியதாலும் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ் தாய்மாமன் எத்திராஜைத் தாக்கியுள்ளார்.

ஆனால் மது போதையிலிருந்த எத்திராஜ் அங்கிருந்து செல்லாமல் மீண்டும் மீண்டும் திட்டிக் கொண்டிருந்ததால், கோபத்திலிருந்த கோகுல்ராஜ் அவரைத் தாக்க, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் எத்திராஜ். கோகுல்ராஜ் விரட்டிச் சென்று, ஆத்திரத்தில் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் எத்திராஜ் கீழே விழுந்தார். கோகுல்ராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். சமபவத்தைப் பார்த்த சிலர் பரங்கிமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் எத்திராஜை சோதிக்க அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், தாய்மாமனைக் கொலை செய்த கோகுல்ராஜைக் கைது செய்தனர்.

மது போதையில் திட்டியதால் ஆத்திரமடைந்த இளைஞர் முன்பின் யோசிக்காமல் தாக்கியதால் உயிரிழப்பும், அவர் சிறைக்கும் போகக் காரணமாக அந்த நிகழ்வு அமைந்துவிட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x