Published : 20 Nov 2019 01:59 PM
Last Updated : 20 Nov 2019 01:59 PM

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் பெய்த மழை அளவில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாக மழை பெய்துள்ளது. சில மாவட்டங்களில் அதிகம் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச் சலனம் மற்றும் லேசான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செ.மீ.மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம்.

அக்டோபர் 1 முதல் இன்று வரை பெய்த மழையின் அளவு தமிழ்நாடு, புதுச்சேரி மொத்தமாக நமக்கு கிடைக்க வேண்டியது 31 செ.மீ. கிடைக்கப்பெற்றது 28 செ.மீ. 3 செ.மீ. குறைவு.

சென்னைக்கு வழக்கமாகப் பெய்ய வேண்டிய மழை அளவு 51 செ.மீ. பெய்த மழை அளவு 30 செ.மீ. இது இயல்பான அளவைவிட 21 செ.மீ. குறைவு. இது 40 சதவீதம் குறைவு.

புதுவையில் வழக்கமாக இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 53 செ.மீ. பெய்த மழை அளவு 33 செ.மீ. இது இயல்பான அளவை விட 20 செ.மீ. குறைவு.

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்கமாக இந்த காலகட்டத்தில் பெய்யவேண்டிய மழை அளவு 33 செ.மீ. பெய்த மழை அளவு 23 செ.மீ. இது இயல்பான அளவை விட 10 செ.மீ. குறைவு.

பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கமாக இந்த காலகட்டத்தில் பெய்யவேண்டிய மழை அளவு 32 செ.மீ. பெய்த மழை அளவு 21 செ.மீ. இது இயல்பான அளவை விட 11 செ.மீ. குறைவு.

அரியலூர் மாவட்டத்தில் வழக்கமாக இந்த காலகட்டத்தில் பெய்யவேண்டிய மழை அளவு 35 செ.மீ. பெய்த மழை அளவு 19 செ.மீ. இது இயல்பான அளவை விட 16 செ.மீ. குறைவு.

அதிக மழை பொழிந்த மாவட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டம் இயல்பான மழை அளவு 33 செ.மீ. கிடைக்க வேண்டியதற்கு பெய்த மழை அளவு 44 செ.மீ. இது வழக்கத்தை விட 24 சதவீதம் அதிகம்.

நெல்லை மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 32 செ.மீ. பெய்த மழை அளவு 41 செ.மீ. இது இயல்பான அளவை விட 20 சதவீதம் அதிகம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கமாக பெய்யவேண்டிய மழை அளவு 29 செ.மீ. பெய்த மழை அளவு 35 செ.மீ இது இயல்பான அளவை விட 23 சதவீதம் அதிகம்.

இதுவரை உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயல்கள் அரபிக்கடல் நோக்கிச் சென்றுவிட்டது. புல்புல் தமிழகம் நோக்கி வராமல் திசை மாறிச் சென்றுவிட்டது. இன்னும் வடகிழக்குப் பருவமழை முடியவில்லை. இந்த மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புள்ளது”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x