Published : 20 Nov 2019 08:53 AM
Last Updated : 20 Nov 2019 08:53 AM

தேர்தலில் முறைகேடு செய்ய திட்டம்: அதிமுக மீது கே.எஸ்.அழகிரி புகார்

உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் செய்ய அதிமுக திட்டமிட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்த நாள் விழா சென்னையில் தமிழக காங்கிரஸின் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு இந்திரா காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் செய்ய அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு தலைவரை மக்கள் நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கவுன்சிலர்களே இத்தலைவர்களைத் தேர்வு செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. காங்கிரஸார் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல் முழுவேகத்தில் செயல்படுபவர்களாக மாறவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மட்டுமல்லாமல், சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஎதிர்கட்சித் தலைவர் ஒப்புதல் இல்லாமல் தமிழக தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரியில் கருணாநிதி சிலை அமைக்க இடம் ஒதுக்கும் விஷயத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. முதல்வர் பழனிசாமி பற்றி தனது கருத்தை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதற்காக அதிமுகவினர் ஆத்திரப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x