முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு 1.58 கோடி குடும்பங்கள் பயன்: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு 1.58 கோடி குடும்பங்கள் பயன்: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
Updated on
1 min read

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 1.58 கோடி குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பயன்பெறலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 600 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் 600 பேருக்கு அடையாள அட்டையை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:ஏழை எளிய மக்களுக்கு விலையில்லாமல் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1.58 குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் பெறக் கூடிய வழிவகையை தமிழக அரசு செய்துள்ளது. ரூ.35 லட்சம் வரை காப்பீடுகுறிப்பாக உயர் அறுவை சிகிச்சை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தும் வழிவகை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது.

255 அரசு மருத்துவமனைகளிலும், 747 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெறலாம். இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் கூடுதலாக பெற்றிருக்கிறோம். கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிக்காக விண்ணப்பித்துள்ளோம்.

தண்டனை அல்லமருத்துவத் துறை என்பது சேவைத் துறை. வெகுகுறைந்த டாக்டர்களை பணி மாறுதல் செய்தது தண்டனை அல்ல. பணியின்போது பணிசெய்ய விடாமல் தடுத்த டாக்டர்களை மட்டுமே பணி மாறுதல் செய்துள்ளோம். பணி மாறுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்ற நிர்வாக செயல்பாடுகள் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் விருகை வி.என்.ரவி, தென்சென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in