Published : 21 May 2014 10:30 AM
Last Updated : 21 May 2014 10:30 AM

கூடங்குளம், நெய்வேலி, வடசென்னை மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு: மீண்டும் மின் வெட்டு அமல்

கூடங்குளம், நெய்வேலி மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களின் கோளாறால் தமிழகத்தில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மின் வெட்டு பெருமளவு குறைக்கப்பட்டு, பெரும்பாலும் 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், மின் உற்பத்தி குறைந்ததால், கடந்த திங்கள்கிழமை இரவு முதல் மீண்டும் ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் தவிர்த்த மற்ற மாவட்டப் பகுதிகளில் ஒரு மணி நேர மின் வெட்டு அமலானது.

இதுகுறித்து மின்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

கூடங்குளம் மின் நிலையத்தில் ஆய்வுப் பணிக்காக திங்கள்கிழமை பிற்பகல் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி முதல் மின் உற்பத்தியைத் தொடங்க, அணு மின் கழகத்தினர் முடிவு செய்துள்ளனர். அங்கு 800 மெகாவாட் உற்பத்தி பாதித்துள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், வடசென்னை புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி கொதிகலன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையத்தின் இரண்டாம் நிலை ஏழாவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி, இயந்திரக் கோளாறால் நிறுத்தப்பட்டுள்ளது. நெய்வேலி நிலையத்தின் முதல் அலகில் ஏற்பட்ட கொதிகலன் விபத்தில் 50 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய மின்சாரத்தில் 600 மெகாவாட் வரை குறைந்துள்ளது. காற்றாலைகளில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி இருப்பதால், ஓரளவு நிலைமை சமாளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x