Published : 19 Nov 2019 04:12 PM
Last Updated : 19 Nov 2019 04:12 PM

சர்க்கரைக்கான ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவது எப்படி? - அமைச்சர் காமராஜ் விளக்கம்

அமைச்சர் காமராஜ்: கோப்புப்படம்

சென்னை

சர்க்கரைக்கான ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசிக்கான ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் காமராஜ் இன்று (நவ.19) வெளியிட்ட அறிக்கையில், "பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10 லட்சத்து 19,491 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, இன்று முதல் 26.11.2019 வரை https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x