Published : 19 Nov 2019 01:54 PM
Last Updated : 19 Nov 2019 01:54 PM

உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு இறுதித் தேதி: திமுக புதிய அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு வரும் நிலையில் விண்ணப்ப விநியோகம் குறித்து திமுக தலைமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற வழக்குகளைக் கடந்து உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க உள்ளன. உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்தலாம் என தமிழக தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விருப்ப மனு பெறுவது குறித்து அதிமுக முதலில் அறிவித்தது. அதிமுகவைத் தொடர்ந்து திமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் விருப்ப மனு அளிப்பது குறித்து அறிவித்தது.

திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சியினருக்கான விருப்ப மனு விநியோகத்தை கடந்த 14-ம் தேதி திமுக தொடங்கியது. வரும் 20-ம் தேதி (நாளை) வரை கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விருப்ப மனுவை ரூ.10 கட்டி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெறலாம் எனவும், அப்படி பெற முடியாதவர்கள் முரசொலி பத்திரிகையில் வந்துள்ள மாதிரிப் படிவத்தை வைத்து அதேபோன்று விண்ணப்பத்தை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுவைப் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.

சென்னை மேயருக்கு உதயநிதி ஸ்டாலினைப் பரிந்துரை செய்து பலர் பணம் கட்டி வருகின்றனர். இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் குறித்து திமுக தலைமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளையுடன் முடியும் விருப்ப மனு விநியோக இறுதித் தேதியை மாற்றி வரும் 27-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நவ.14-ம் தேதி ஆரம்பித்து 20-ம் தேதிவரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கால அவகாசத்தை நீட்டித்திட பலவேறு மாவட்டச் செயலாளர்கள் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் வரும் 27-ம் தேதி வரை விண்ணப்ப விநியோக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு கட்டண விவரங்கள்:

மாநகராட்சி மேயர் - ரூ.50,000, மாமன்ற உறுப்பினர் - ரூ.10,000, நகர்மன்றத் தலைவர் - ரூ.25,000, நகர்மன்ற உறுப்பினர் - ரூ.5000, பேரூராட்சித் தலைவர் - ரூ.10,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் - ரூ.2500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.10,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - ரூ.5000.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும்.

விருப்ப மனு படிவத்தை ரூ.10 செலுத்தி மாவட்டத் தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x