

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்:
“தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு கடலூர் - 6 செ.மீ., திருச்செந்தூர் - 5 செ.மீ., ஆலங்குடி - 4 செ.மீ. அதிகபட்ச வெப்பநிலையாக 32°செல்சியஸ் இருக்கும். குறைந்தபட்சமாக 25°செல்சியஸ் இருக்கும்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு, சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’’.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.