Published : 18 Nov 2019 06:57 PM
Last Updated : 18 Nov 2019 06:57 PM

ஆவணங்களை உயர் அதிகாரியிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்; பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு: டிச.2-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விவரங்களை கூடுதல் டிஜிபியிடம் ரிப்போர்ட் செய்ய பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக உள்ள பொன்.மாணிக்கவேல் இந்த மாதம் 30-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அவர் பணி ஓய்வுபெறும் முன் அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும், பிரதான வழக்குத் தொடுத்த மனுதாரர் யானை ராஜேந்திரன் சார்பில் ஜி.எஸ்.மணியும், பொன்.மாணிக்கவேல் சார்பில் வழக்கறிஞர் பத்பநாமனும் வழக்கில் ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியின் வாதத்தில், “ சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி, பொன்.மாணிக்கவேல் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை. பொன்.மாணிக்கவேல் விசாரணை தொடர்பான எந்த அறிக்கைகளையும், எப்போதும் உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதில்லை.

இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது ஆகும். சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். அவர் வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறப்போகிறார். எனவே ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

பொன்.மாணிக்கவேல் சார்பாக வழக்கறிஞர் பத்மநாபன் தனது வாதத்தில், ''பொன்.மாணிக்கவேல் தனது நடவடிக்கைகள், விசாரணைகள் தொடர்பாக உயரதிகாரிக்கு மின்னஞ்சல் மற்றும் போஸ்ட் மூலம் தகவல் கொடுத்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

அப்போது பதிலளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “அவர் அஞ்சல் அனுப்ப நாங்கள் போஸ்ட் பாக்ஸ் இல்லை. உயரதிகாரிகளுக்கு அவரது நடவடிக்கை குறித்த தகவல்களை ரிப்போர்ட் செய்ய வேண்டும். வழக்கு தொடர்பாகவும் ரிப்போர்ட் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அப்போது பதிலளித்த பொன்.மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் பத்மநாபன், ''கடந்த ஓராண்டாக விசாரணை நடத்த ஒத்துழைப்பு இல்லை'' என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''முதலில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பாக உயர் அதிகாரியான கூடுதல் டிஜிபியிடம் ரிப்போர்ட் அளிக்க உத்தரவிடுங்கள்'' என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விவரங்களை கூடுதல் டிஜிபியிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டனர்.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தனது வாதத்தில், ''சிலை கடத்தல் விவகாரத்தில் சில அரசியல்வாதிகள், அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தவறான தகவல்களையும் கொடுத்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.

அது தொடர்பான கருத்துகளை உங்கள் பதில் மனுவில் தெரிவியுங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ இந்த வழக்கை ஒத்திவைப்போம். இது தொடர்பாக விரிவாக விசாரிக்கலாம் எனக்கூறி டிசம்பர் 2-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x