Published : 18 Nov 2019 04:34 PM
Last Updated : 18 Nov 2019 04:34 PM
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக முதன்முதலில் கைது செய்யப்பட்ட மாணவனின் (உதித் சூர்யாவின்) தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனுவை இரண்டாம் முறையாக தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்நிலையில், வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சட்ட விரோதமாக டாக்டர் வெங்கடேசனின் மகனை தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி தேனி கண்டாமனூர் விலக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வழக்கில் டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த அக்டோபர் 17ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறுநீரகத் தொற்று காரணமாக வெங்கடேசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதால் ஜாமின் வழங்கக் கோரியும் டாக்டர் வெங்கடேசன் இரண்டாம் முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (நவ.18) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், நீட் தேர்வில் வெங்கடேசனின் மகன் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் முடியடையவில்லை.
மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வெங்கடேசனின் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT