

கஜா புயலின்போது ஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் வேரோடு சாய்ந்த ஆலமரங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதால், அவற்றை வேறு இடத்தில் நட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்தாண்டு வீசிய கஜா புயலின் போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் பெருமளவு தென்னை, தேக்கு, மா, பலா, முந்திரி உள்ளிட்ட ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன.
அப்போது, ஒரத்தநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான 2 ஆலமரங்களும் வேரோடு சாய்ந்தன. அவை இதுவரை அப்புறப்படுத்தப் படவில்லை.
அதேநேரம், அந்த மரங்களின் வேரின் ஒரு பகுதி மண்ணுக்குள் இருப்பதால், அவை இன்னும் உயிர்ப்புடன் பசுமையாக இருக்கின்றன. எனவே, இந்த மரங்களை பிடுங்கி வேறு இடத்தில் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒரத்தநாடு ரமேஷ் கூறியதாவது: ஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் இருந்த 2 பெரிய ஆலமரங்களின் கீழ் அமர்ந்து தான் பத்திர எழுத்தர்கள், பத்திரங்களை எழுதிக் கொடுத்து வந்தனர். அங்கு வரும் மக்களுக்கும் அவை பயனுள்ளவையாக இருந்தன. கடந்தாண்டு வீசிய கஜா புயலில் 2 ஆல மரங்களும் வேரோடு சாய்ந்தன. இவை இன்னும் உயிர்ப்புடன் இருந்தாலும், நாளுக்கு நாள் அவற்றின் கிளைகள் பட்டுப்போய் வருகின்றன.
இது போன்ற ஆலமரங்களை வளர்க்க வேண்டுமென்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே, முழுவதுமாக பட்டுப்போகும் முன், அந்த மரங்களை வேரோடு பிடுங்கி அரசுக்கு சொந்தமான பொது இடத்திலோ அல்லது அதே இடத்திலோ நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.