Last Updated : 18 Nov, 2019 03:18 PM

 

Published : 18 Nov 2019 03:18 PM
Last Updated : 18 Nov 2019 03:18 PM

மாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின் பரிந்துரை தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தனிப்பட்ட வழக்கில் பொதுவான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலம் நகர் குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராமசாமி. வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து ராமசாமி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

அதே நேரத்தில் காவல்துறையில் மாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராமசாமி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ”மனுதாரரின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் தனி நீதிபதி பொதுவாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுநல வழக்குகளில் தான் பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். தனிப்பட்ட வழக்கில் பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.

எனவே இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த பொதுவான உத்தரவு அறிவுரையாக மாற்றப்படுகிறது. இந்த அறிவுரையை அமல்படுத்துவது தொடர்பாக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x