Published : 18 Nov 2019 09:35 AM
Last Updated : 18 Nov 2019 09:35 AM

நானிலம் போற்றும் பல்கலை வித்தகர் ‘நகுபோலியன்’

சென்னை

நகுபோலியன் என்ற புனைப் பெயரில் டெல்லி வாழ் தமிழர்களால் பெரிதும் அறியப்பட்டவர் ந.பால சுப்பிரமணியன். கடந்த 13-ம் தேதி 87-வது வயதில் இயற்கை எய்திய இவர் ஒரு புதிர் என்றால் அது மிகையாகாது. புதிர் என்பதற்குக் காரணம், இவருடன் இணக்கமாகப் பழகியவர்களுக்கே இவரைப் பற்றிச் சரியாகத் தெரியாததுதான்.

அடக்கத்தின் காரணமா அல்லது அவரது தொழிலால் ஏற்பட்டப் பாதிப்பா என்று சொல்ல இயலாது. ஏனெனில் அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதி அரசுப் பணியில் இருந்தபோது பாதுகாப்புத் துறை யுடன்தான் தொடர்பில் இருந்தார். அதிலும் முக்கியமாக ரகசிய சங்கேத மொழிப் பரிவர்த்தனை களிலும் குறியீட்டுச் செய்தி சம் பந்தப்பட்ட பகுதிகளில்தான் இருந் தார். அங்கு ரகசியம் காக்கப் பட வேண்டுமென்பதால் இயற்கை யாகவே அதிகம் அளவளாவுதலில் ஈடுபட்டதில்லை. ஆனாலும் அவரது நகைச்சுவை உணர்வுக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர்.

1932-ம் ஆண்டில் விஜய வாடாவில் நடராஜன் தம்பதிகளுக் குப் பிறந்த பாலசுப்பிரமணியன், தொடக்க நாட்களில் திருச்சியில் படித்தவர். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மாணவனாக இருக்கும்போதே இவரது ‘இராமானுஜனின் எண் கோட்பாடு’ ஆய்வு கட்டுரை பிரசுரமானது.

அப்போதே அவர் இந்திய அரசின் புதிதாக நிறுவப்பட்ட அறிவியல் ஆய்வுக் குழுவில் சேர்ந்து அதன் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். கிரிப்டாலஜி என்றறியப்பட்ட ரகசிய சங்கேத மொழியில் அவரது நிபுணத்துவம் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அன் றைய பிரதமர் நேரு அவர்களால் இவரது சேவை போற்றப்பட்டது. தொடர்ந்து ‘ஜாயிண்ட் சைஃபர் பீரோ’ அமைப்பின் இயக்குநரானார்.

தொடர்ந்து அதில் சேவை புரிந்து வந்ததால் அவரது தமிழ்ச் சேவை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ளேயே இருந்தது. ஆயினும் டெல்லி வாழ் தமிழர்களால் அங்கு நடத்தப்படும் நாடகங்களாலும் அவர் ஈர்க்கப் பட்டார். வசனம் எழுதுவது நடிப்பது போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழ்ந்தார்.

டெல்லி வாழ் தமிழர்கள் இவரை ‘டெல்லி பாலு’ என்றோ (அவரது பாரதியின் மீது கொண்ட அளவற்ற விருப்பத்தால்) ‘பாரதி பாலு’ என்றோதான் அறிந்தனர். அவரது புனைப் பெயர் ‘நகுபோலியன்’ என்பதாகும். ஆனால் பலருக்கு (டெல்லியிலும் சென்னையிலும்) நகுபோலியன் என்றெழுதுபவரின் பின்புலம் தெரியாது.

நகைச்சுவை உணர்வு

பாலு, கணினி அறிவுடன் கணிதம், சமஸ்கிருத மொழியையும் கலந்து தனது எழுத்தில் ஒரு புதிய, இதுவரை எவரும் காணாத சொல்லாட்சியையும் யுக்தியையும் கையாண்டார். ஆகையால் இவரது நகைச்சுவை தனித்துவம் பெற்று மிளிர்ந்தது.

பாரதியின் படைப்புகளில் அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார் பாலு. பாரதி நூற்றாண்டு விழாவின்போது ‘ஜேபர் காப்பியம்’ என்ற ஒரு நீண்ட நையாண்டி கவிதை எழுதி அதன் மூலம் புகழ் பெற்றவர். இது அப்போது ஒரு பாரதிதினத்தன்று மேடையேற்றப்பட்டது. பின்னர் வானொலியின் கிழக்காசியத் தமிழர் களுக்காக ஒலிபரப்பப்பட்டது. கணையாழியிலும் பின்னர் வெளி யிடப்பட்டது. அதன் காப்புக் கவிதையே அவரது நகைச் சுவையின் எதிரொலியாக அமைந் தது. அப்போதே அவர் கணினியின் மகத்துவத்தை அறிந்திருந்தார்.

தொழிலின் காரணத்தால் மேம் படுத்தப்பட்ட கணினி பயிற்சி பெற்ற பாலு, அவ்வியந்திரத்தின் தன்மை யையும் மனிதன் அவ்வியந் திரத்துக்கு அடிமையாகும் விந்தை யையும் புரிந்து கொண்டவர். ஆகையால்தான் இக்காப்பு புனைந் துள்ளார். அவர் அளித்தபடி பார்த்தால்:

ஜேபர் வாக்கியம்

[முற்குறிப்பு: சொக்கன் = சொந்தக் கணினி = PC]

கண்சிமிட்டும் நேரத்திற் கணக்கின்றிப் பல கோடி
யெண்சிமிட்டும் எந்திரம் என் காப்பு.

(இக்கவிதைக்கு ஜேபர் வாக்கியம் என்ற பெயர் எப்படி வந்தது? அவரே கவிதையினூடே விளக்கமும் தருகிறார்.

‘ஜேபர் வாக்கியம்’ பேர் தான் எப்படி ஜெனித்த வித மென்ன வென்று கிண்டினேன். விளக்கிற்றே கீழ்க்கண்ட காப்(பு) இயற்றி:

‘லுக்கிங்க்கிளாஸ் ஊ(டு)’ என்று லூயிஸ் கரோல் எழுதியுள்ள

புக்கில் வரும் போயம் என் காப்பு!

லூயிஸ் கரோல் எழுதிய ஒரு நையாண்டிக் கவிதையில் ‘ஜேபர்வேக்’ என்ற ஒரு கற்பனை மிருகம் வரும். அதைக் கொல்வதுதான் கதை)

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆகையால் இது ஒன்றே அவரது நகைச்சுவையின் தரத்தை உணர்த்தவல்லது.

சகுந்தலை வேடம்

அனைத்து வயதினருமே இவரது ஒளிவு மறைவின்றிப் பழகும் முறையை விரும்பினர். கற்றுக் கொடுப்பதில் வல்லவர். அதற் காகவே இவரைச் சந்திக்க மக்கள் விரும்பினர். எந்தத் தலைப்பிலும் பேசக்கூடியவர் என்பது மட்டுமின்றி மற்ற விஷயங்களையும் கலந்து உணர்ச்சிப்பூர்வமாக வெளியிடும் பார்வை கொண்டவர். ‘சவுத் இண்டியன் தியேட்டர்ஸ்’ என்ற டெல்லி அமைப்பில் பங் கேற்றவர். ‘சகுந்தலா’ என்ற சம்ஸ்கிருத மொழி நாடகத்தில் இவர் சகுந்தலை வேடம் ஏற்று நடித்ததாகத் தெரிகிறது.

பன்மொழிப் புலமை

ஓய்வுபெற்ற பிறகு சென்னை கோட்டூர்புரத்தில் தனது கவனத் தைக் கர்னாடக சங்கீதத்தில் செலுத்தினார். பல தமிழ் எழுத்தாளர் களையும் சந்தித்து அளவளாவு தலில் காலம் கழித்தார். நகைச் சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி போன்றவர்கள் நண்பர் களானார்கள். ஆங்கில ஆசிரி யர்களின் படைப்புகளை சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்து எழுதியதில் இருந்து, அவரது பன்மொழிப் புலமை தெரிகிறது.

அவரது இல்லத்திலேயே பலருக்கு சம்ஸ்கிருத மொழி கற்றுக் கொடுக்கவும் தொடங்கினார். மாணவர்கள் முதல் உயர் பதவியில் இருப்பவர்கள் வரை அவரிடம் வந்து சம்ஸ்கிருதம் கற்றனர். அவ்வாறு அவரிடம் பயிலச் சென்ற ராகவ் ஹரிகிருஷ்ணா என்ற பட்டதாரி மாணவன் (இப்போது அமெரிக்காவில் உயர் படிப்பில்) தனது பெற்றோருக்கு அனுப்பிய இரங்கற்குறிப்பில் பாலுவின் திறமையையும் அவரது ஆழ்ந்த அறிவாற்றலையும் விவரிப்பதன் மூலம் இளைஞர்களும் அவர்பால் ஈர்க்கப்பட்டதை அறிய முடிகிறது.

ஒரு நல்ல நகைச்சுவையாளனை யும் பல மொழிகளில் வல்லமை படைத்து கணிதத்தில் தனது திறமையைக் காட்டி ஒரு வழி காட்டியாய் இருந்த மனிதனை இழந்து நிற்பது அவரது மனைவி யும் மூன்று குமாரர்களும் ஒரு பெண்ணும் மட்டுமல்ல; அவரது பல விசிறிகளும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x