

கோவையில் அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததால் விபத்துக்குள்ளான அனுராதாவுக்கு திமுக சார்பில் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாய்ந்து விபத்தில் சிக்கிய அனுராதாவையும், அவரது பெற்றோரையும் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“கடந்த 11ம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வருகை தந்த நேரத்தில், அவரை வரவேற்க சாலைகளில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா என்ற இளம்பெண் விபத்துக்குள்ளானார்.
அப்போது பின்னால் வந்த ஒரு வாகனம் அவரது உடல் மீது ஏறியுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த தனியார் மருத்துவமனையில் சிறப்பான வகையில் தீவிர சிகிச்சை அளித்திருந்தாலும், நேற்றைய தினம் ஒரு காலை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு, அகற்றி உள்ளார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், ஏற்கனவே சென்னை பள்ளிக்கரணையை ஒட்டியுள்ள பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்ட ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் விழுந்து, சுபஸ்ரீ என்ற ஐ.டி.கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்த இளம்பெண் அதே இடத்தில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். அந்தப் பெண் ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர். அதைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதியன்று சிங்காநல்லூர் பகுதியில் நினைத்து பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த பெண்ணும் ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக லாரி ஓட்டுநர் மீதுதான் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்களே தவிர கொடி கட்டியவர்கள், விழா நடத்தியவர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் மீது எந்த வித வழக்கும் இதுவரை பதியப்படவில்லை. இந்த செய்தி வெளியில் வரக்கூடாது என்பதற்காக அரசு முயற்சி எடுத்திருக்கிறது. அதையும் மீறி இந்த செய்தி வெளிவந்திருக்கிறது. மறுநாள் ஊடகத்துறையினர் இந்த விபத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, அந்தச் சம்பவம் குறித்து தனக்கு தெரியாது - செய்தி வரவில்லை என அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார்.
தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது தெரியாது என்று எப்படிச் சொன்னாரோ, அதேபோன்று இந்த சம்பவமும் தெரியாது என அலட்சியமாக பதில் கூறி இருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது. வேதனைப்பட வேண்டியதாக இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில், ஒரு காலை இழந்து இன்னும் குணம் அடையாமல் இருக்கும் அனுராதா என்ற பெண்ணை காப்பாற்ற தமிழக அரசு முழுமுயற்சி எடுக்க வேண்டும் என, மிகுந்த உருக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் எல்லாவித உதவிகளையும் அந்த குடும்பத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் அந்த குடும்பத்திற்கு துணை நிற்கும் என்ற உறுதியை, அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறேன். சிகிச்சை முழுமையாக முடிவடைந்த பிறகு, செயற்கைக் கால் பொருத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், அதையும் திமுக பொறுப்பேற்றுக் கொண்டு செய்து தரும் என்ற உறுதியினையும் அவர்களுக்கு அளித்திருக்கிறோம்” என்றார்.