Last Updated : 16 Nov, 2019 11:22 AM

 

Published : 16 Nov 2019 11:22 AM
Last Updated : 16 Nov 2019 11:22 AM

மீண்டும் குவாரி இயக்க அனுமதி கோரிய மதுரை பிஆர்பி் நிறுவனம்: மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

மதுரை

மீண்டும் குவாரி இயக்க அனுமதி கோரி பிஆர்பி் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"தமிழகத்தில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டத்தில் கிரானட் குவாரிகள் நடத்தி வருகிறோம்.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதாக எங்கள் நிறுவனம் மீது 2012, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து எங்கள் நிறுவனம் சார்பில் கிரானைட்கள் கற்கள் ஏற்றுமதியை நிறுத்துமாறு சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கும், எங்கள் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு வங்கிகளுக்கும் டிஎஸ்பி கடிதம் அனுப்பினார்.

கீழவளவு காவல் நிலையத்தில் பதிவான வழக்குகள் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கின் அடிப்படையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதங்கள் மதுரை மாவட்ட குவாரிகள் தொடர்பானது. பிற மாவட்டங்களில் செயல்படும் குவாரிகளை இந்தக் கடிதம் கட்டுப்படுத்தாது.

ஆனால் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் எங்கள் நிறுவனத்தின் கிரானைட் ஏற்றுமதி தடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் காரணமாக மேலூர் தெற்குத்தெருவில் உள்ள எங்களது கிரானைட் பாலிஷ் நிறுவனத்தை செயல்படுத்த முடியவில்லை.

இதனால் கிரானைட் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், வங்கிக் கணக்குளை முடக்குமாறும் அனுப்பிய கடிதம் மதுரை மாவட்ட குவாரிகளுக்கு மட்டும் பொருந்தும் என துறைமுகங்களுக்கும், வங்கிகளுக்கும் விளக்க கடிதம் அனுப்ப டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழகத்தில் பிற கிரானைட் குவாரிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கிரானட் கற்கள் கொள்முதல் செய்து, தெற்குத்தெருவில் உள்ள கிரானைட் பாலிஷ் நிறுவனத்தில் வைத்து கிரானைட் கற்களை பாலிஷ் செய்து சிலாப்புகளாகவும், டைல்ஸ்களாகவும் மாற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்கவும் அனுமதி வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன் மனு தாரர் குவாரிகள் நடத்தியதில் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் 4ஆயிரத்து 124.14 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறபடுகிறது.

இதே கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. ஆனால் மீண்டும் இதே கோரிக்கை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளார். எனவே மனு தாரரின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது என்று உத்தரவு பிறபித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x