Published : 16 Nov 2019 09:26 AM
Last Updated : 16 Nov 2019 09:26 AM

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களான ராஜா, செந்தில்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், ‘‘தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்றும், பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைக்கான புதிய விதிகளைக் கொண்டு வந்து அதன்படி பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றலாம் என மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியுள்ளது. இதனால் எங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவித்து பணிமூப்பு அடிப்படையில் எங்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனியாக ஒரு சட்டத்தை இயற்றி இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அதுபோன்ற நடவடிக்கைக்கு சட்ட அங்கீகாரம் பெறப்படவில்லை.

மக்கள் நலன் காக்கும் அரசு ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பகுத்தறிவுடன் கூடிய சமநிலையை அரசு பின்பற்ற வேண்டும். மனுதாரர்கள் விஷயத்தில் அரசு நேர்மையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. எனவே மனுதாரர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் 12 வாரங்களுக்குள் உரிய பதவி உயர்வை வழங்க வேண்டும். இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x