Published : 16 Nov 2019 08:43 AM
Last Updated : 16 Nov 2019 08:43 AM

மெட்ரோ ரயிலில் நெரிசல் இல்லாத நேரங்களில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை

கோப்புப்படம்

சென்னை

வெளிநாடுகளில் இருப்பது போல் இந்தியாவிலும் நெரிசல் இல்லாத நேரங்களில் மெட்ரோ ரயில்களில் கட்டணத்தை சிறிய அளவில் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

நாடுமுழுவதும் பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், புனே உட்பட பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட நகரங்களில் முதல்கட்ட திட்டங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 2, 3-ம் கட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையின் விரிவாக்கம் 150 கிலோ மீட்டரை தாண்டியுள்ளதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. கொல்கத்தா மெட்ரோவில் கட்டணம் குறைவு என்பதால் மக்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மெட்ரோ ரயில் நிறுவனங்கள், எதிர்பார்த்த அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கையை எட்டவில்லை.

மற்றொரு புறம் பெரிய நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பதோடு, காற்றுமாசும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே, மாநில அரசுகள் பொதுபோக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர்களின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப் பணிகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாடுமுழுவதும் ரயில்வேயில் இருப்பது போல், மெட்ரோ ரயில் நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து பேசப்பட்டது. இருப்பினும், ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிறுவனத்திலும் திட்டப்பணிகளுக்கான செலவு பல மடங்கு வேறுபடுகிறது. எனவே, ஒரே மாதிரியான கட்டணத்தை அமல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

வெளிநாடுகளில் மெட்ரோ ரயில்களில் இருப்பதுபோல், நெரிசலான நேரங்களில் (பீக் ஹவர்) ஒரு கட்டணமும், நெரிசலற்ற நேரங்களில் 10 முதல் 15 சதவீதம் வரையில் குறைவான கட்டணமும் விதிக்கப்பட்டால், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பெரிய நகரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக எந்த முடிவும் இதுவரையில் எடுக்கவில்லை’’ என்றனர்.

இதுதொடர்பாக சிட்டிசன் கன்சியூமர் ஆண்ட் சிவில் ஆக்சன் குரூப் (சிஏஜி) அமைப்பின் இயக்குநர் எஸ்.சரோஜா கூறும்போது, “பெரிய நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், காற்று மாசடைந்து வருகிறது. எனவே, தனிநபர்களின் வாகனங்களை கட்டுப்படுத்தி ரயில், பேருந்து போன்ற பொதுபோக்குவரத்து வசதியை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும்.

மேலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கிடையே, மெட்ரோ ரயில்களில் நெரிசலற்ற நேரங்களில் கட்டணத்தை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவது வரவேற்கதக்கது.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x