திருச்சியில் துணை மின்நிலையங்களுக்குள் நுழைய முயன்ற சவுதியைச் சேர்ந்த 2 பேரிடம் ரகசிய விசாரணை: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா?

திருச்சியில் துணை மின்நிலையங்களுக்குள் நுழைய முயன்ற சவுதியைச் சேர்ந்த 2 பேரிடம் ரகசிய விசாரணை: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா?
Updated on
1 min read

திருச்சியில் நள்ளிரவில் 3 துணை மின் நிலையங்களுக்குள் நுழைய முயன்று சிக்கிய 2 சவுதி இளைஞர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என திருச்சியில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

திருச்சி அருகே பிராட்டியூரில் உள்ள துணை மின்நிலையத் துக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளிநாட்டு இளைஞர் ஒருவர் செல்ல முயன்றார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி, வெளியே அனுப்பினர். அந்த நபர் மீது சந்தேகம் எழுந்ததால் இது பற்றி போலீஸாருக்கு தெரியப்படுத்தினர். அவர் வந்த காரில் தனியார் ஹோட் டலின் பெயர் எழுதியிருந்ததாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித் தனர்.

இதையடுத்து கன்டோன் மென்ட் உதவி ஆணையர் அசோக் குமார், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீஸார் இரவோடு இரவாக அந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அந்த நபர் சவுதி அரேபியாவிலுள்ள புரைதா நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (28) என்பதும், அவருடன் அறையிலிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தவுலானிக் ரஷீத்(38) என்பதும் தெரியவந்தது.

வேலைக்கு ஆள் தேர்வு செய்வதற்காக திருச்சி வந்துள்ளதாக அவர்கள் கூறினர். எனினும் அவர்களிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் மற்றும் புல னாய்வு பிரிவுகளின் அதிகாரிகள் நீண்டநேரம் விசாரித்தனர்.

இதுபற்றி போலீஸார் கூறியதாவது: இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் கேரளா வந்துள்ளனர். அங்கிருந்து கடந்த 22-ம் தேதி திருச்சி வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு திருச்சி தென்னூர், பிராட்டியூர், மணிகண்டம் ஆகிய இடங்களிலுள்ள துணை மின் நிலையங்களுக்கு அப்துல் ரகுமான் சென்றுள்ளார். எலெக்ட்ரிகல் பொறியாளர் என்பதால், இங்கு மின்நிலையங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்க்கச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் சவுதியைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லியில் அரசு ஆவணங்களை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது. மேலும், சவுதிக்கு வேலைக்கு ஆள் சேர்ப்பதுபோல ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு தகுதியான நபர்களை இங்கு தேர்வு செய்ய வந்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்தது. ஆனால், எங்களுக்கும், அதற்கும் தொடர்பில்லை என தெரிவித்தனர். சில சந்தேகங்கள் இருந்ததால் இது பற்றி இந்திய, சவுதி அரேபிய தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் இருவரும் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய முடியாதபடி பாஸ்போர்ட்டில் சீல் வைக்கப்பட்டு விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 24) மாலையே சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in