Published : 14 Nov 2019 07:30 PM
Last Updated : 14 Nov 2019 07:30 PM

சென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு

சென்னை

சென்னையில் போலீஸார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆட்டோ ரேஸ் தொடர்ந்து நடக்கிறது. இன்று போரூர் சாலையில் நடந்த ஆட்டோ ரேஸில் கலந்துகொண்ட மெக்கானிக் ஒருவரின் ஆட்டோ முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ், ஆட்டோ ரேஸ், கார் ரேஸ், விலை உயர்ந்த கார்களின் ரேஸ் என பலவகையான பந்தயங்கள் சட்டத்தை மீறி நடக்கின்றன. மோட்டார் சைக்கிள் பந்தயம் சென்னையில் பல இடங்களில் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், மோட்டார் சைக்கிள் என பல பரிசுத்தொகை உள்ளன. இதேபோன்று சூதாட்ட கார் ரேஸும் நடக்கிறது.

சென்னையில் கடந்த வாரம் தாம்பரம் அருகே நடந்த கார் ரேஸில் காவலர் மீது மாணவன் ஓட்டி வந்த கார் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோன்று பைக் ரேஸின்போது பலரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று அதிகாலை நடந்த ஆட்டோ ரேஸில் ஆட்டோ மெக்கானிக் ஒருவர் முந்திச் செல்லும் ஆர்வத்தில் ஆட்டோவை முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதிக் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வில்லிவாக்கம் திருவேங்கட அய்யர் தெருவில் வசித்தவர் பிரபாகரன் (30). இவர் ஆட்டோ மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இன்று அதிகாலையில் பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறி, சிலர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சில மணிநேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பிரபாகரனைக் கொண்டுவந்து சேர்த்தவர்களிடம் எங்கே விபத்து நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்தபோது. முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பைக்கிலிலிருந்து கீழே விழுந்து உயிரிழக்கவில்லை, ஆட்டோ ரேஸில் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது,

இன்று அதிகாலையில் பிரபாகரன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர், போரூர் டோல்கேட்டில் இருந்து தாம்பரம் வரை, மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோக்களில் ரேஸ் சென்றுள்ளனர். உடன் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆட்டோ ரேஸைக் கண்காணிக்க ரேஸை நடத்துபவர்கள் சென்றுள்ளனர்.

ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட பிரபாகரன், பின்னால் தன்னை துரத்தும் ஆட்டோவைவிட வேகமாகச் சென்றார். முன்னாள் ஒரு கண்டெய்னர் லாரி செல்ல, அதன் இடது புறம் முந்திச் செல்ல முயன்று ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து லாரி மீது மோதாமல் இடதுபுறம் ஒடிக்க முயல, ஆட்டோ லாரி மீது மோதி அப்படியே சாலையில் கவிழ்ந்தது. இவை அனைத்தும் உடன் சென்ற ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

கீழே விழுந்த பிராகரன் பலத்த காயம் அடைந்து அதன் காரணமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்துவிட்டதாக நண்பர்கள் கூறியது பொய் எனத் தெரியவந்ததால், மருத்துவமனையில் அனுமதித்த 20-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x