Published : 14 Nov 2019 09:10 AM
Last Updated : 14 Nov 2019 09:10 AM

புதுவையில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுநாள் அனுசரிப்பு

நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் நடிகர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னகபண்பாட்டு மையம் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 97-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தமிழ் நாடக வரலாற்றுக்கு புத்துயிர் அளித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சைதென்னக பண்பாட்டு மையமும் இணைந்து ஆண்டுதோறும் நவ.13-ல் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றன. 97-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் புதுச்சேரி அரசு சார்பில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசுத் துறை அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை ஆர்த்தி, நடிகர் கணேஷ், விக்னேஷ், உதயா உள்ளிட்ட திரை நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் ஆகியோர் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் படத்துடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ்,“நடந்து முடிந்த நடிகர் சங்கத்தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதே எங்கள் புகார். தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை.

மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ‘என்னை நோக்கிபாயும் தோட்டா' படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. திட்டமிட்டபடி படம் வரும் 29-ம் தேதி வெளியாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x