Published : 14 Nov 2019 07:55 AM
Last Updated : 14 Nov 2019 07:55 AM

ஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்

திருச்சி அன்பு சுவரில் நிரம்பியுள்ள ஆடைகளை எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், அருகில் உள்ள அட்சய பாத்திர மையம் உணவுப் பொருட்கள் இன்றி காலியாக உள்ளது.படம்: ஜெ.ஞானசேகர்

ஜெ.ஞானசேகர்

திருச்சி

மக்கள் தங்களுக்குத் தேவைப் படாத- அதேவேளையில் மீண்டும் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள எந்தப் பொருளையும் பிறருக்கு இலவசமாக வழங்கும் நோக்கில், கடந்த 23.12.2017 அன்று 52-வது வார்டு கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பு ‘அன்பு சுவர்' மையம் திறக்கப்பட்டது. இந்த மையத்தில் பிற பொருட்களைக் காட்டிலும் பழைய ஆடைகளே அதிக அளவில் வைக்கப்படுகின்றன. அவற்றை எடுத்துச் செல்ல தினமும் ஏழை, எளிய மக்கள் வந்து செல்கின்றனர்.

இதேபோல 22.12.2018 அன்று அரசு மருத்துவமனை எதிரேயும், கடந்த ஆகஸ்டில் அரியமங்கலம் கோட்டம் 61-வது வார்டு பர்மா காலனியிலும் திறக்கப்பட்ட திறந்தவெளி நூலகங்களுக்கும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, அரசு மருத்து வமனை எதிரேயுள்ள திறந்தவெளி நூலகத்துக்கு இதுவரை 8,000-க் கும் அதிகமானோர் வந்துள் ளதுடன், 5,100-க்கும் அதிகமான புத்தகங்கள் பகிரப்பட் டுள்ளன. இவை மட்டுமன்றி மாநகராட்சியின் சாலையோர பூங்காக்கள், திறந் தவெளி உடற்பயிற்சி நிலையங்க ளுக்கும் தினமும் ஆயிரக் கணக் கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஏழை- எளிய மக்களுக்கு உணவளிக்கும் நோக்கில் ‘அன்பு சுவர்' மையத்துக்கு அருகிலேயே கடந்த செப்.13-ம் தேதி ரூ.10 லட்சம் செலவில் பிரிட்ஜ் வசதியுடன் கூடிய ‘அட்சய பாத்திரம்' மையம் திறக்கப்பட்டது. இந்த மையத்தில் மக்கள் வைக்கும் கெட்டுப்போகாத பொட்டல உணவுகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை ஏழை, எளிய மக்கள் இலவசமாக எடுத்து உட்கொள்ளலாம். ஆனால், இம்மையம் திறக்கப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், பெரும்பாலான நாட்கள் உணவு வகைகள் இல்லாமல் காலியாகவே உள்ளது. இதனால், இம்மையத்தை நம்பி வரும் ஏழை, எளிய மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பி.அய்யாரப்பன் கூறும்போது, “தற்போதைய சூழலில் எவ்வளவு பொட்டல உணவுகள் மற்றும் பழங்களை வைத்தாலும் காலியாகிவிடும். ஆனால், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், இம்மையம் காலியாகவே உள்ளது. இந்நிலையை மாற்ற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இங்கு வைக்கப்படும் உணவுப் பொருட் களை விநியோகிக்கும் பணியை சிறந்த தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி வட்டாரத்தினர் கூறியதாவது:

சமைத்த உணவுகளை ‘அட்சய பாத்திரம்' மையத்தில் வைக்க அனுமதி கிடையாது. பழங்கள், பிஸ்கெட்கள் அவ்வப்போது வருகின்றன. இருந்தாலும், பெரும் பாலான நேரங்களில் காலியாகவே உள்ளதால், மாநகர பொதுமக்கள் தாமாக முன்வந்து உணவு வகைகளை அளிக்க வேண்டும்.

இதுதொடர்பாக மாநகரில் உள்ள பேக்கரிகள், விழா நடைபெறும் அரங்குகளின் தரப்பினரை அழைத்துப் பேசி, மீதமாகும் நல்ல நிலையில் உள்ள பழங்கள், பொட்டல உணவுகள் ஆகியவற்றை இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ‘அட்சய பாத்திரம்' மையம் தொடங்கப்பட்டதன் நோக்கம் முழுமை பெற அனைத்து நடவடிக்கையையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x