Published : 14 Nov 2019 07:50 AM
Last Updated : 14 Nov 2019 07:50 AM

குடும்ப பிரச்சினையால் விபரீதம்: இரு குழந்தைகளை 300 அடி பள்ளத்தில் வீசி கொலை செய்த தந்தை கைது - வாழவந்திநாடு போலீஸார் விசாரணை

குடும்ப பிரச்சினை காரணமாக தனது இரு குழந்தைகளை கொல்லிமலை சீக்குப்பாறை என்ற இடத்தில் இருந்த 300 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்த தந்தையை வாழவந்தி நாடு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (28). இவருக்கு பாக்கியம் (24) என்ற மனைவி மற்றும் கிரிதாஸ் (8), கவிதர்ஷிணி (5) என ஒரு மகன், மகள் இருந்தனர். கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த பாக்கியம் கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரைப் பிரிந்து அரியூர் நாடு கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

குழந்தைகள் இருவரும் கவபரப்பட்டி அருகே தெம்பளம் ஊராட்சியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி கவரப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானம் பேசி குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும், மனைவி பாக்கியத்தையும் சமாதானம் செய்து அனுப்பும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைகள் இருவரை மட்டும் சீரஞ்சீவியுடன் பாக்கியத்தின் பெற்றோர் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு மேலானபோதும் குழந்தைகளை சிரஞ்சீவி பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து ள்ளார். சிரஞ்சீவியை தொடர்பு கொண்டபோதும் தகவல் எதுவும் தெரியவில்லை. இதில் சந்தேகமடைந்த பாக்கியம், இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சிரஞ்சீவியை அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 8-ம் தேதி கொல்லிமலை செம்மேடு அருகே சீக்குப்பாறை எனும் இடத்தில் உள்ள வியூபாயிண்டில் இருந்து இரு குழந்தைகளையும் வீசியெறிந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த தகவலின் பேரில் கொல்லிமலை தீயணைப்புத் துறையினர் சீக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கிச் சென்றபோது 300 அடி பள்ளத்தில் கிரிதாஸ், கவிதர்ஷினி ஆகியோர் இறந்து கிடந்தனர். இதையடுத்து இருவரது உடலையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனிடையே இரு குழந்தையும் பள்ளத்தில் வீசி கொலை செய்த சிரஞ்சீவியை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x