Published : 13 Nov 2019 01:07 PM
Last Updated : 13 Nov 2019 01:07 PM

புதிய மாவட்டங்களில் வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும்: ராமதாஸ்

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கான வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது. இந்நிலையில் செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, 4 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, நவம்பர் 12-ம் தேதியிட்டு, வருவாய் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.13) தன் ட்விட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி தென்காசி ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கான வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும்!

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த மாவட்டங்களுக்கான புதிய ஆட்சியர் அலுவலக வளாகம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பிற கட்டமைப்பு வசதிகளையும் விரைந்து ஏற்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 6 மருத்துவக் கல்லூரிகளுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டத்தக்கது. மத்திய அரசும் அதன் பங்கை ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x