

கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால், அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த புள்ளி விவரத்தின்படி, கழிவுகளை அகற்றும் பணியின்போது அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
உயிரிழந்த 620 பேரில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்தரபிரதேசத்தில் 71 பேரும், ஹரியாணாவில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் அகற்றும்போது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 88 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.