Published : 12 Nov 2019 05:12 PM
Last Updated : 12 Nov 2019 05:12 PM

''நான் சர்வாதிகாரியா?''- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 

சென்னை

பொதுக்குழுவில் நான் தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறியதை மீண்டும் திரித்துள்ளனர் என்று கூறிய ஸ்டாலின், நான் சர்வாதிகாரியா? எனக் கேட்டு தொண்டர்களுக்கு விளக்கக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று தன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

“திமுக வரலாற்றில் ஒவ்வொரு பொதுக்குழுவுமே எழுச்சிமிக்க ஒரு புதிய அத்தியாயம்தான். நவம்பர் 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் கட்சியின் சட்டவிதிகளில் காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட திருத்தங்களும், நமக்கான பொறுப்புகளை உணர்ந்து, பணியினைத் தொடர்ந்திட ஊக்கமளிக்கக் கூடியவையாக அமைந்துள்ளன.

தலைவர் கலைஞர் இல்லாத பொதுக்குழு, பேராசிரியர் தனது உடல்நிலை காரணமாகப் பங்கேற்க இயலாத பொதுக்குழு, தலைவர் என்ற பொறுப்பை சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், அந்த இருபெரும் வழிகாட்டிகள் அருகில் இல்லாமல் எப்படி பொதுக்குழுவை நடத்தி முடிக்கப் போகிறேன் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது.

பொதுக்குழுவில் வெளிப்படையான கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை அதில் பேசியவர்கள் முன்வைத்தனர். அத்தனையும் கட்சியின் நலன் கருதியே சொல்லப்பட்டவை என்பதைப் புரிந்துகொண்டேன். இந்த உட்கட்சி ஜனநாயகம்தான் 70 ஆண்டுகால திமுகவின் தனிப்பெரும் சிறப்பு.

பொதுக்குழு என்றாலே அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, நாம் மட்டுமல்ல; நாடே எதிர்பார்ப்பது வழக்கம். கட்சியின் ஒவ்வொரு தீர்மானமும் தமிழ்ச் சமுதாயத்தின் நலன் காக்கும் பிரகடனங்களாக இருக்கும். நவம்பர் 10-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சி சட்டவிதிகளில் திருத்தங்கள், தனிச் சிறப்புத் தீர்மானம், அதனைத் தொடர்ந்து 20 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விதி 18 (4) புதிய விதி சேர்க்கையின்படி, “தலைவருக்கு, தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பொறுப்புகளையும், கடமைகளையும், அதிகாரங்களையும் தேவைக்கேற்ப செயல்படுத்த முழு அதிகாரம் உள்ளது. மேலும், மற்ற பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் உத்தரவுகளை மறு ஆய்வு செய்தல், சீராய்வு செய்தல், மாற்றியமைத்தல், நீக்குதல் உள்பட அனைத்து அதிகாரமும் தலைவருக்கு உள்ளது.

கட்சியின் சட்டவிதிகளையும் கட்சியின் நலனுக்கேற்பவும், அதன் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் திருத்தி அமைக்க, தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அவ்வாறான திருத்தங்கள் உடனே அமலுக்கு வரும்” என்கிற அந்தத் திருத்தத்தின் கடைசி வரி மிக முக்கியமானது.

“அவ்வாறு கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும்” என்கிற இந்த வரி கட்சியின் வழிவழி வரும் ஜனநாயகத்தன்மைக்குச் சான்றாகும். இந்தத் திருத்தங்களுடன் கட்சியில் ஆண், பெண் உறுப்பினர்களுடன் திருநங்கையரும் பங்கேற்பதற்கான சட்டத்திருத்தம், வெளிநாடுவாழ் கட்சித் தோழர்கள் அந்நாட்டு சட்டவிதிகளுக்கும் - இந்திய அரசின் சட்டவிதிகளுக்கும் உட்பட்டு, தலைமையின் உரிய ஒப்புதலோடு கிளைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் ஏற்ப சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியின் நலன் - முன்னேற்றம் ஆகியவற்றை மனதில் நிலைநிறுத்தி கொண்டு வரப்பட்ட திருத்தம்தான், ஊராட்சிக் கழகங்கள் என்ற நிலைக்குப் பதில், கிளைக் கழகங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்கிற திருத்தம்.
12,600 ஊராட்சிக் கழகங்கள் இருந்த நிலையில், அவற்றுக்கு மாறாக 1 லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப் போகின்றன. அத்துடன், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 உறுப்பினர்கள் கொண்ட குழு, 10 ஊராட்சிக் கழகங்களுக்கு ஓர் ஒன்றியம் போன்ற திருத்தங்கள் கட்சியின் ரத்த நாளங்களைச் சீராக்கி, மேலும் செம்மையாகச் செயல்படுவதற்கான கட்டமைப்பாகும்.

வலிமைப்படுத்தப்படும் கட்சியின் கட்டமைப்பினைக் கொண்டு நாம் மேற்கொள்ளும் பயணத்தின் நோக்கம் என்ன என்பதை பொதுக்குழுவில் உங்களில் ஒருவனான என்னால் முன்மொழியப்பட்ட தனிச்சிறப்புத் தீர்மானமும், கட்சியின் செயல்பாடுகள் எத்தகைய வழியில் அமைய வேண்டும் என்பதை மற்ற 20 தீர்மானங்களும் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தனிச் சிறப்புத் தீர்மானத்தில், இந்திய அரசியல் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 70-ம் ஆண்டு விழா, நவம்பர் 26 அன்று நாடாளுமன்றத்தின் மய்ய மண்டபத்திலே நடைபெறவுள்ள நிலையில், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கும் பண்புகளுக்கும் ஊறு நேராமல், மதச்சார்பற்ற - சமதர்ம - ஜனநாயகக் குடியரசாகவே இந்திய ஒன்றியத்தை மத்திய அரசு கட்டிக்காத்திட வேண்டும்.

அதே நேரத்தில், எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை மத்திய ஆட்சிமொழியாக்கிடவும், நாடாளுமன்ற - சட்டப்பேரவைத் தேர்தல்களில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் அமைந்திடவும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசே குவித்து வைத்துக் கொள்ளாமல் மாநிலங்களுக்கு அவற்றை அளித்து, மாநிலங்களின் அதிகாரத்தைப் பெருக்கி, கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டிடவும் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும், என்பதுதான் கட்சியின் தனிச் சிறப்புத் தீர்மானமாகும்.

1962-ல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா ஒற்றை மனிதராக முன்மொழிந்த குரலின் எதிரொலிதான் இந்தத் தீர்மானம். 1974-ல் தமிழக சட்டப்பேரவையில் தலைவர் கலைஞர் நிறைவேற்றிய தீர்மானத்தில் முழங்கிய, ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்பதன் நீட்சிதான் இந்த தனிச்சிறப்புத் தீர்மானம். இது திமுகவின் லட்சியக் குரல்.

தனிச்சிறப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்கள் பணியில் திமுக மேற்கொள்ள வேண்டியவற்றை சுட்டிக்காட்டுவதாகும். அதில் குறிப்பாக, ‘பொய் நெல்லைக் குத்தி புளுகுச் சோறு வடிக்கும்’ - மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு, மக்களிடம் திமுக பொய் வாக்குறுதிகளை வழங்கியதாக மேற்கொள்ளும் அவதூறுப் பிரச்சாரத்தை அடியோடு முறித்திடும் வகையில், கடந்த 2011 முதல் இன்றைய தேதி வரை, அன்றைய ஜெயலலிதா தொடங்கி இன்றைய எடப்பாடி பழனிசாமி வரை அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகளான, விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள், நீட் தேர்வு விதிவிலக்கு, ஹைட்ரோ கார்பன் திட்டம், உதய் மின் திட்டம், புதிய கல்விக் கொள்கை, மோனோ ரயில் திட்டம் என எத்தனை விதமாக இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை திமுகவுக்கு இருக்கிறது.

அதுபோலவே, கமிஷன்-கரப்ஷன்-கலெக்ஷன் என்பதை தாரக மந்திரமாகக் கொண்ட அதிமுக ஆட்சியில், நெடுஞ்சாலைத்துறை ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காற்றாலை மின் ஊழலில் அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி நிர்வாக டெண்டர் முறைகேடுகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையுமே ஊழல் சகதியில் சிக்கி, தமிழ்நாட்டை நாசப்படுத்தி நாற்றமெடுக்க வைத்துள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடைய இடங்களில் மத்திய அரசின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவை மேற்கொண்ட நூற்றுக்கணக்கான ரெய்டுகளையும் தனித் தீர்மானமாகப் பட்டியலிட்டு நிறைவேற்றியுள்ளோம்.

ஆதாரங்களின் அடிப்படையில் ரெய்டு நடத்தியதாக சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்த நிலையில், அமைச்சர்கள் மீதும் அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல், ஊழலில் திளைக்கும் அதிமுக அரசைக் காப்பாற்றி, பினாமி ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் திமுக இருக்கிறது.

ஆட்சியாளர்களோ தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளாமல் திமுகவின் மீது அவதூறுகளைப் பரப்பி, ஊடகங்களில் பேசுபொருளாக்குவதில் மட்டுமே கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய அவதூறுகளை எத்தனையோ முறை எதிர்கொண்டு நெருக்கடி நெருப்பாற்றில் நீந்தி, புடம் போட்ட தங்கமாக - தகதகவென ஒளிரும் தன்மையுடன் வெற்றிக்கரையேறிய வரலாறு திமுகவுக்கு உண்டு.

அந்த வரலாற்றை மீண்டும் எழுதிட வேண்டுமென்றால், நமக்குள் ஒற்றுமை வேண்டும்; ஒருங்கிணைப்பு வேண்டும். அடிமட்டத் தொண்டர்களை அரவணைக்க வேண்டும், மக்களிடம் நாம் செல்ல வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்மிடம் வருவார்கள் என்பதை கழகப் பொதுக்குழுவில் ஆற்றிய உரையில் எடுத்துரைத்தேன்.

திமுகவின் செயல் தலைவராக இருந்து மாவட்டங்கள் தொடங்கி கிளைக் கழகங்கள் வரை ஆய்வுக்கூட்டங்களை நடத்தியபோது, கட்சியின் நலன் காக்க சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தேன். அதையேதான் கழகப் பொதுக்குழுவிலும் மீண்டும் நினைவூட்டினேன். எந்த இயக்கத்திற்கும் வெளிப்பகை, உள்பகை என இரண்டு உண்டு. வெளிப்பகை என்பது கண்களுக்குப் புலப்படக்கூடியது.

அதனை எதிர்கொண்டு வெல்ல முடியும். உள்பகை என்பது அத்தனை எளிதாகக் கண்களுக்குப் புலப்படாது. புரையோடி அது நம்மையே அழித்துவிடும். அதனால்தான், ‘பாழ் செய்யும் உட்பகை’ என்ற சொற்றொடரைத் தலைவர் கலைஞர் நமக்கு அடிக்கடி நினைவூட்டுவார். இன்றைய நிலையில், வெளிப்பகை நம் மீது அவதூறுகளை அள்ளி வீசி அழிக்க நினைக்கிறது. அதனை எதிர்கொள்ள வேண்டுமென்றால், உள்பகை இல்லாத உன்னத நிலையைக் திமுகவில் உருவாக்கிட வேண்டும். அதைத்தான் பொதுக்குழுவில் உரையாற்றிடும்போது எடுத்துரைத்தேன்.

மிசா சிறைவாசம் குறித்து அவதூறு, முரசொலி நிலம் குறித்து அவதூறு என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆட்சியில் இல்லாத திமுகவை நோக்கி அவதூறு - பொய்கள் பரப்புகிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் நாம் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதுதான்.

தலைவர் கலைஞர் நம்மிடமிருந்து இயற்கை சதி செய்து பிரித்த பிறகு, என் சக்திக்கு மீறி உழைத்து இந்தக் கட்சியைக் கட்டிக்காக்க உங்களுடன் இணைந்து நிற்கிறேன். வெற்றி எளிதாக வராது. நாம் எளிதாக வெற்றி பெறவும் விடமாட்டார்கள். எனவே, தொண்டர்களை அரவணைத்து, மக்களிடம் சென்று கட்சி வளர்ச்சிக்காக உழைத்தால்தான் வெற்றி பெற முடியும்.

அதற்கு மாறாக, கட்சிக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் திருந்தவேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள் என்பதை பொதுக்குழுவில் எடுத்துரைத்து, எனக்காக அல்ல, கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன்.

கட்சிப் பொதுக்குழுவின் அத்தனை சிறப்பம்சங்களையும் மறைத்துவிட்டு, “ஸ்டாலின் சர்வாதிகாரி ஆகிறாரா?” என ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஊடகத்துறை நண்பர்களின் இக்கட்டான நிலையை நான் அறிவேன். அதிமுக அரசின் அவலட்சணங்களை விமர்சித்தால் அரசு கேபிள் என்ற கழுத்துச் சுருக்குக்கு ஆட்படவேண்டும். பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் உரிமத்திற்கே உலை வைத்துவிடும்.

ஆட்சியில் இல்லாத திமுகதான் அன்றாடம் மக்கள் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றி நாம் ஒரு பிரச்சினையைக் கிளப்புவோம் என்றுகூட அவர்கள் நம்மிடம் உரிமை எடுத்துக் கொள்ளலாம். திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அதன் வழிமுறைகள் ஜனநாயகத்தன்மை வாய்ந்தவை. உங்களில் ஒருவனான நானும் அந்தத் தன்மையுடன் செயல்படக்கூடியவன்தான்.

தி.க. - திமுக என திராவிட இயக்க வரலாற்றில் அறவழிப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதனைத் தலைமையேற்று கட்டுக்கோப்புடன் நடத்துவதற்கு ‘சர்வாதிகாரி’கள் நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் பேரறிஞர் அண்ணாவை ‘சர்வாதிகாரி’யாக தந்தை பெரியார் நியமித்து, போராட்டத்தை வழிநடத்திடச் செய்தார்.

அதற்காக அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை. அடக்குமுறை செய்யவில்லை. அன்பும் அறிவும் கொண்டு போராட்டத்தை நடத்தினார். அண்ணா வழிதான் நம் வழி. அந்த வழியில் தொடர்ந்த கலைஞரின் பாதையில் பயணிப்போம். திசைதிருப்ப நினைப்போரைப் புறக்கணிப்போம்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், துண்டறிக்கை வழங்கல் எனத் தொடர்ச்சியாக நமக்கான களம் காத்திருக்கிறது.

நவம்பர் 11 அன்று நடைபெற்ற, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நவம்பர் 16 அன்று பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தருமபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். கழக நிர்வாகிகள் மற்ற இடங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

இது நமது வெற்றிக்கான தொடக்கப்புள்ளி என்று பொதுக்குழுவில் குறிப்பிட்டேன். அந்தப் புள்ளி, கோடாக நீள வேண்டும். கேடு மிகுந்த ஆட்சியாளர்களை விரட்டிடும் படையாக வேண்டும். வெற்றி வரலாற்றுக்குக் கட்டியம் கூறிடும் பொதுக்குழுவில் சொன்னவற்றை மனதில் கொண்டு, பொதுத்தேர்தலில் செய்து காட்டுவோம்.

தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாக நாம் ஒன்றுபட்டு நிற்கும்போது நம்மை வென்றிட எந்தக் கொம்பனாலும் முடியாது. எனவே, ஒன்றிணைவோம், வென்றிடுவோம்”.

இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x