Published : 12 Nov 2019 11:53 AM
Last Updated : 12 Nov 2019 11:53 AM
புதுச்சேரி
பிரதமரின் அனுமதி பெற்றுதான் சிங்கப்பூர் பயணம் சென்றோம் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் நாராயணசாமி இன்று (நவ.12) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"புதுச்சேரியில் உள்ள கரசூர் பகுதியில் சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையக் கட்டுமானம் மற்றும் தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் சிங்கப்பூர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
காரைக்காலில் ரூ.1,500 கோடியில் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவும் முதலீட்டாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். பல்வேறு தொழிற்சாலைகளைத் தொடங்க முதலீட்டாளர்களுடன் முடிவு செய்துள்ளோம்.
புதுச்சேரியில் ஏராளமான தொழிற்சாலைக்ள் வரவேண்டும் என்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சிங்கப்பூருக்குத் தனிப்பட்ட பயணமாக நானும் அமைச்சரும் சென்றோம்
இதுகுறித்து கடந்த மாதம் 24-ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டோம். அதன் பிறகு கடந்த மாதம் 29-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முறையாக அனுமதி தந்தது. எல்லா விதிமுறைகளையும் கடைபிடித்துதான் சிங்கப்பூர் பயணம் சென்றோம்.
ஆனால் ஆளுநர் கிரண்பேடி, யாரிடம் அனுமதி பெற்றார்கள், யார் செலவு செய்தார்கள் என்று கேள்வி கேட்பது பொறுப்பற்ற செயல். புதுச்சேரியில் யாருக்கும் நாங்கள் அடிமை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை. எங்களைக் கேள்வி கேட்க பிரதமருக்குத்தான் உரிமையுள்ளது.
சென்னையில் இருந்து புதுச்சேரி, காரைக்கால் கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க முதலீட்டாளர்கள் இந்த மாதம் 20-ம் தேதி புதுச்சேரிக்கு வரவுள்ளார்கள்.
சிங்கப்பூர் பயணத்தின் மூலம் சுற்றுலாவுக்கு ஆயிரம் கோடி முதலீடு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.200 கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக உள்ளார்கள்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT