Published : 12 Nov 2019 10:06 AM
Last Updated : 12 Nov 2019 10:06 AM

குடிமராமத்து திட்டத்தால் நிரம்பும் நீர்நிலைகள்; கூடுதலாக 16 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி: தமிழக அரசு தகவல்

சென்னை

அரசின் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது. இதனால், இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி பாதுகாப்பது, விவசாயத்துக்கு நீர் திறம்பட பயன்படுத்தப்படுவது, கழிவுநீர், பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதை ஊக்கப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய திட்டம்தான் குடிமராமத்து திட்டம்.

அதிகமான நீரை ஏரிகளில் சேமித்துவைத்து, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, விவசாயிகள் விவசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தில், நீண்ட காலமாக தூர்வாரப்படாமல், சீரமைக்கப்படாமல் இருந்த அணை, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் விவசாயிகள் சங்கம் மூலமாக அவர்களது பங்கேற்புடன் குடிமராமத்து பணிகள் நடந்து வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.421 கோடியில் 3,024 நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் ரூ.499 கோடியில் 1,829 நீர்நிலைகளில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது.

பொதுவாக கடந்த காலங்களில், கடைமடை வரை தண்ணீர் செல்ல 30 நாட்கள் ஆகும். ஆனால், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டமும், காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 15 முதல் 20 நாட்களில் கடைமடை வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்கிறது. இதனால் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 1 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் மட்டும் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 1 கோடியே 18 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x