

சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் பலரும் ஆட்டோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெரும்பாலான ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக, அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, ஆபத்தான முறையில் பள்ளிகளுக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸார் தற்போது தொடர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்யவும், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்த 5-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், விதிகளை மீறி அதிக மாணவர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றதாக 1,275 ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.