Published : 12 Nov 2019 06:39 AM
Last Updated : 12 Nov 2019 06:39 AM
ஈரோடு
கோபி அருகே ஐந்து மணி நேரம் பெய்த கனமழையால், தரைப் பாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப் பட்டது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டி, கணக்கம் பாளையம், கொண்டையம் பாளையம், அத்தாணி, டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று அதிகாலை 5 மணி முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிகாலை தொடங்கி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
வேதபாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கொண்டையன்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், சத்தியமங்கலம் - அந்தியூர் தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கணக்கம்பாளையம் பகுதிகளிலும் இரு தரைப்பாலங்கள் மூழ்கின.
கணக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆரம்பப்பள்ளி வளாகம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர், தரைப்பாலங்களில் அடைத்திருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு சீர் படுத்தினர். இதனால், வெள்ள நீர் ஓடை வழியாகச் சென்று பவானி ஆற்றில் கலந்தது. குடியிருப்பு பகுதிகளிலிருந்தும் வெள்ள நீர் விரைவாக வெளியேற்றப்பட்டது.
மழை குறித்து விவசாயிகள் கூறும்போது, வேதபாறை காட்டாற்றின் குறுக்கே, வேதபாறை நீர் தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், நீரினைத் தேக்கி வைத்திருக்க முடியும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இப்பகுதியில் பெய்த கன மழையால், வேதபாறை ஓடை வழியாக 2 டிஎம்சிக்கு மேல் நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலந்துள்ளது.
எனவே, வேதபாறை நீர் தேக்க திட்டத்தை விரைவாக செயல்படுத்தவேண்டும். கணக்கம் பாளையம் பகுதியில் குடியிருப்பு களில் வெள்ள நீர் புகாமல் தடுக்க, வேதபாறை ஓடையில் தடுப்பு சுவர்கள் கட்டவேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT