Published : 11 Nov 2019 09:18 PM
Last Updated : 11 Nov 2019 09:18 PM

காற்றுமாசு; பொதுமக்கள் அச்சமோ, பீதியோ அடையத்தேவை இல்லை : தமிழக அரசு 

சென்னை

காற்றுமாசை கட்டுப்படுத்தும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் காற்று மாசை அதிகப்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ள தமிழக அரசு பொதுமக்கள் அச்சமோ, பீதியோ கொள்ளத்தேவை இல்லை என தெரிவித்துள்ளது.

காற்று மாசு குறித்து இன்று 11.11.2019 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை முதன்மை செயலாளர், (பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி, முதன்மை செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர், ஜெ. ராதா கிருஷ்ணன், இயக்குநர் பேரிடர் மேலாண்மை (பொறுப்பு) டாக்டர்.என்.வெங்கடாசலம். மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளதாவது:

“இந்த கூட்டத்தில் மாசுகட்டுப்பாட்டுவாரியம் மற்றும் வல்லுநர்கள் காற்றின் வேகம், வெப்பம், ஈரப்பதம், வாகன போக்குவரத்து, சாலையிலுள்ள தூசி, கட்டுமானப்பணி, திடகழிவுகளை எரிப்பது, கடல் காற்றின் தன்மை போன்ற காரணங்களால் காற்று மாசு, ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர். தற்போது கடல் காற்றின் மாற்றத்தினால் காற்று மாசு படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்றில் மாசின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது அதனடிப்படையில் காற்றின் மாசு அதிகமாக உள்ள இடங்களில் மாசினை குறைக்க கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் மரம், டயர் மற்றும் குப்பைகள் எரிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது மீறி எரிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சாலை பணிகள், கட்டிட பணிகள் நடைபெறும் இடங்களில் ஏற்படும் தூசுகளை குறைக்க அதன் ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து தூசியின் அளவை முற்றிலும் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனத்திலிருந்து வெளியேறும் புகையிலிருந்து ஏற்படும் மாசை தடுப்பதற்கு போக்குவரத்துத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் சம்ந்தப்பட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில் ஏற்பட்டுள்ள காற்றின் மாசிற்கு கடற்காற்று எதிர்பார்த்த அளவுக்கு வீசாதது ஒரு முக்கிய காரணமாகும். இந்த காற்று மாசு படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாசுக்கட்டுபாட்டுவாரியம் தெரிவித்துள்ளது,

இருப்பினும் முதல்வரின் உத்தரவின்படி சென்னையில் காற்று மாசு கண்காணிக்கப்பட்டு குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது சுகாதாரத் துறையின் மூலம் அனைத்து மருத்துவ மனைகளிலும் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருமல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ மனையில் சென்று உடனே சிகிச்சைப்பெறவேண்டும்.

பொது மக்கள் காற்று மாசு ஏற்படும் எந்தவிதசெயல்களிலும் ஈடுபட வேண்டாம். காற்று மாசை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆகவே பொது மக்கள் காற்று மாசு தொடர்பாக எந்தவித அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

காற்று மாசு அளவு கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1. 0‐50 நன்று (Good)
2. 51‐100 போதுமானது (Satisfactory)
3. 101‐200 மிதமானது (Moderate)
4. 201‐300 மோசமானது (Poor)
5. 301‐400 மிக மோசமானது (Very Poor)
6. 401‐500 தீவிரம் (Severe)
7. 500 க்கு மேல் மிக தீவிரம் அல்லது அவசர கால நிலை (Severe – Emergency)

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x