Published : 11 Nov 2019 05:05 PM
Last Updated : 11 Nov 2019 05:05 PM

உள்ளாட்சித் தேர்தலை கூட்டணியுடன்தான் திமுக சந்திக்கிறதா? - ஸ்டாலின் பதில்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலை கூட்டணியுடன்தான் திமுக சந்திக்கும் என, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ.11) காலை, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் பேசியதாவது:

"உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக, தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்குரிய விண்ணப்பப் படிவங்களை வழங்குவது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும், திமுகவும் உள்ளாட்சித் தேர்தலை மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சந்திப்பதற்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதுகுறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாங்கள் மிக விரிவாக விவாதித்து இருக்கிறோம்," எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

உட்கட்சித் தேர்தல் குறித்த முடிவு, அறிவிப்பு எதுவும் இருக்கிறதா?

அது பற்றி நேற்று தீர்மானத்திலேயே முடிவு செய்து அறிவித்திருக்கிறோம். பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் உட்கட்சித் தேர்தல் முறையாக நடைபெறும்.

கூட்டணிக் கட்சிகளுடன் எப்போது பேசத் திட்டமிட்டுள்ளீர்கள்?

தேதி அறிவிக்கட்டும். தேதி அறிவித்தவுடன் முறையாகப் பேசப்படும்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் பதவி இடங்கள் புதிதாக உருவாக்கப்போவதாக வந்த தகவல் பற்றி?

ஊராட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஏற்கனவே 30, 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அடிப்படையில் கிளைகள் வார்டு வாரியாக அமைக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலை கூட்டணியுடன்தான் சந்திக்கிறீர்களா?

அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. கூட்டணிக் கட்சியுடன்தான் திமுக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x