Published : 11 Nov 2019 03:45 PM
Last Updated : 11 Nov 2019 03:45 PM

உள்ளாட்சித் தேர்தல்; வரும் 14-ம் தேதி முதல் விருப்ப மனு: திமுக அறிவிப்பு

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 14-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற வழக்குகளைக் கடந்து உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க உள்ளன. இந்நிலையில் அதிமுக விருப்ப மனு பெறுவது குறித்து அறிவித்தது. நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இன்று மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசப்பட்டது. இந்நிலையில் அதிமுகவைத் தொடர்ந்து திமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் விருப்ப மனு அளிப்பது குறித்து அறிவித்துள்ளது.

இன்று பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் , திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலிலும் நிச்சயமாக திமுக கூட்டணி தொடரும், தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

விருப்ப மனு குறித்த விவரம்:

விருப்ப மனுவை ரூ.10 கட்டி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெறலாம் எனவும், அப்படி பெற முடியாதவர்கள் முரசொலி பத்திரிகையில் வந்துள்ள மாதிரிப் படிவத்தை வைத்து அதேபோன்று விண்ணப்பத்தை அளிக்கும்படி பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

விருப்ப மனு கட்டண விவரங்கள்:

மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் - ரூ.50,000, மாமன்ற உறுப்பினர் - ரூ.10,000, நகர்மன்றத் தலைவர் - ரூ.25,000, நகர்மன்ற உறுப்பினர் - ரூ.5000, பேரூராட்சித் தலைவர் - ரூ.10,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் - ரூ.2500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.10,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - ரூ.5000.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும்.

விருப்ப மனு படிவத்தை ரூ.10 செலுத்தி மாவட்டத் தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x