

தூத்துக்குடி
மு.க.ஸ்டாலின் 'சர்வாதிகாரியாக செயல்படுவேன்' என்று சொன்னது கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக, தெளிவாக எடுக்கவேண்டும் என்பதற்காக. அதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை (திங்கள்கிழமை) அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது.
திமுக கொடுத்த அழுத்தத்தினால்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஆகவே திமுக தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது. விரைவில் தேர்தல் பணிகள் தொடர்பான அறிவிப்பை திமுக தலைவர் வெளியிடுவார்.
பாஜக- சிவசேனாவுக்குள் பல பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியை அமைக்க முடியாத அளவுக்கு அங்கு பல குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தார்கள். ஆனால் எந்த முதலீடு ஈர்த்து வந்தார்கள் என்று தெரியவில்லை. இதுவரை எந்த தொழில்நுட்பமும் வரவில்லை. மக்களின் செலவில் அவர்கள் வெளிநாடு சுற்றிப் பார்த்ததாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்.
மு.க.ஸ்டாலின் 'சர்வாதிகாரியாக செயல்படுவேன்' என்று சொன்னது கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக, தெளிவாக எடுக்கவேண்டும் என்பதற்காகக் கூறியிருக்கிறார். அதை அரசியல் காரணங்களுக்காக புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்றார்.
முன்னதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக. தங்களை திருத்தி கொள்ளாத திமுக நிர்வாகிகள், திருத்தப்படுவார்கள்" எனக் கூறியிருந்தார்.
அவரின் இந்தக் கருத்து பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வரும் நிலையில் கனிமொழி இவ்வாறு கூறியிருக்கிறார்.