

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டி.என்.சேஷனின் துணிச்சலும் திடநம்பிக்கையும் என்றென்றும் நினைவுகூரப்படும். அவர்தான், இந்தியத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் அபாரமான பங்களிப்பு என்னவென்பது குறித்து சாமான்யனும் விவாதிக்கும் பேசுபொருளாக்கியவர்" என்று கமல் தெரிவித்துள்ளார்.
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்பதை சுருக்கியே டி.என்.சேஷன் என அனைவராலும் அழைக்கப்பட்டார். 10-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்தார். தனது பதவிக் காலத்தில் கட் அவுட்டுகளுக்கு கெடுபிடி, அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களுக்குக் கெடுபிடி என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.
ஓய்வுக்குப் பின்னர் வளர்ப்பு மகளுடன் சென்னையில் வசித்துவந்த அவர், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.