Published : 11 Nov 2019 09:22 AM
Last Updated : 11 Nov 2019 09:22 AM

இனிவரும் காலம் சவாலானதாக இருக்கும் திமுகவின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன்: தவறுகளை திருத்திக் கொள்ள நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், மறைந்த தலைவர்கள் அண்ணா. கருணாநிதி உருவப் படங்களுக்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை

கட்சி வளர்ச்சிக்காக நாளடைவில் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. உடல்நலக்குறைவால் பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்கவில்லை. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பொதுக்குழுவின் நிறைவில் ஸ்டாலின் பேசியதாவது:2014-ல் மக்களவையில் திமுகவுக்கு ஒரு எம்.பி.கூட இல்லை. ஆனால், தற்போது 24 பேர் எம்.பி.யாக உள்ளனர். 2016-ல் 89 ஆக இருந்த திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை இப்போது 100 ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவை சுற்றியே தமிழக அரசியல் நடக்கிறது.

சக்தியை மீறி உழைப்பேன்கருணாநிதியைப் போல என்னால் பேச, எழுத, உழைக்கத் தெரியாது. ஆனால், எதையும் முயற்சித்துப் பார்க்கும் துணிவு உண்டு. அதனை கருணாநிதி எனக்கு கற்றுத் தந்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக, திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காக என் சக்தியையும் மீறி நான் உழைப்பேன்.

மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான நிர்வாகிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் மூலம் கட்சியில் என்ன நடக்கிறது, அடிமட்ட நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் சிலர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். கட்சியின் வளர்ச்சிக்காக போட்டி போட்டிக் கொண்டு செயலாற்றுவதில் கோஷ்டி இருக்கலாம். ஆனால், அது தனிப்பட்ட பகையாக மாறிவிடக் கூடாது.

மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தியபோது தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறியிருந்தேன். இப்போதும் அதையே கூறுகிறேன். கட்சி வளர்ச்சிக்காக நாளடைவில் சர்வாதிகாரியாக மாறுவேன். தவறு செய்யும் நிர்வாகிகள் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். நம்மை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று நினைத்து விடக்கூடாது.

மிகப்பெரிய தோல்வி

என்னதான் அதிமுக அதிகாரத்தையும் பணபலத்தையும் பயன்படுத்தினாலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக அடைந்தது மிகப்பெரிய தோல்வி. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து களைய வேண்டும். அடிமட்ட நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும். கட்சி நிர்வாகிகள் மக்களோடும் தொண்டர்களோடும் இரண்டற கலந்து பழக வேண்டும். அனைத்து நேரங்களிலும் கட்சிப் பணியாற்ற வேண்டும்.

திமுகவினரிடம் ஒற்றுமையும் உழைப்பும் குறைந்து வருகிறது. இதனை சரிசெய்ய வேண்டும். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திமுகதான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நம்மை அவ்வளவு எளிதாக வெற்றிபெற விட மாட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். மிசா சட்டத்தில் நான் கைதாகவில்லை என்றும் முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இனி வரும் காலம் திமுகவுக்கு சவாலானதாக இருக்கப் போகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அனைத்தையும் எதிர்கொண்டு நாம் வெற்றிபெற வேண்டும். அதற்காக திமுகவினர் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

திருநங்கைகளை திமுகவில் சேர்க்க முடிவு

* சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ, ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
* உள்கட்சி தேர்தல் நடக்கும்வரை கட்சியின் நிர்வாகிகள் அதே பதவியில் தொடர அனுமதி அளித்தும், திருநங்கைகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் திமுகவில் சேரவும், இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கவும், திமுக இளைஞரணியில் 18 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும் கட்சி விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
* தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் திமுகவை பலப்படுத்தி பொதுக்குழு, செயற்குழுவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலமின்றி இருப்பதால் கட்சியில் ஒருவரை சேர்த்தல், நீக்குதல் போன்ற அதிகாரங்களை திமுக தலைவர் மேற்கொள்ளும் வகையில் கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
* பொதுக்குழுவில் பேசிய பலரும் மாவட்ட, ஒன்றிய அளவில் பல கோஷ்டிகள் இருப்பதாகவும், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள் கீழ்மட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ‘தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்’ என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
* தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் திமுகவில் கிளைகளாக உள்ளன. இவை பெரிதாக இருப்பதால் 99,420 கிராம ஊராட்சி வார்டுகளையும் கட்சி கிளைகளாக மாற்ற விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக கிளைச் செயலாளர்களின் எண்ணிக்கை 99,420 ஆக அதிகரிக்கும்.
* பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன், மீன் வறுவல் என அசைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x