Published : 11 Nov 2019 09:15 AM
Last Updated : 11 Nov 2019 09:15 AM

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. அக்டோபர் இறுதியிலும், நவம்பர் தொடக்கத்திலும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 3 புயல்கள் உருவாகி தமிழகத்தை விட்டு விலகிச் சென்றன அதனால், கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை இல்லை. வங்கக் கடலில் உருவாகி, மேற்கு வங்கம் நோக்கி சென்றுள்ள ‘புல்புல்’ புயல் செயலிழந்த பிறகே, தமிழகத்தில் மீண்டும் மழை வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தென் மாவட்டங்கள், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். கோவை, நீலகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூர், மே.மாத்தூர் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ., ராநாதபுரம் மாவட்டம் கடலாடி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியில் 7 செ.மீ., தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை அதிகரிக்க வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவி வந்த ‘புல்புல்’ புயல், மேங்குவங்கத்தில் கரையைக் கடந்துவிட்டது. இது படிப்படியாக வலுவிழந்துவிடும். இதற்கிடையே கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன்மூலம் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x