Published : 10 Nov 2019 11:16 AM
Last Updated : 10 Nov 2019 11:16 AM

திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம்; 10 தீர்மானங்கள்

சென்னை

திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10 தீர்மானங்கள்:

* திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.

* இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்.

* வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.

* திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.

* திமுக அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானம் நிறைவேற்றம்.

* தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

* வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றம்.

* அடிப்படை பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியல் சட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

* இந்திய அரசியல் சட்டம் 70-ம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

கோப்புப் படம்

பின்னணி:

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்.6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் காரணமாக, பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

அழைப்புக் கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி படங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்மையில் மறைந்த திமுக உறுப்பினர்கள், பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான சுஜித் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், திமுகவின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x