Published : 09 Nov 2019 07:31 PM
Last Updated : 09 Nov 2019 07:31 PM

ஒவ்வொரு இந்தியரும் அயோத்தி தீர்ப்பால் மனநிறைவு கொள்வார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

சென்னை

ஒவ்வொரு இந்தியரும் அயோத்தி தீர்ப்பால் மன நிறைவு கொள்வார்கள் என நம்புவதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு இந்திய நீதித்துறையின் நீதி பரிபாலனத்தில் மிக முக்கிய முத்திரை பதித்ததாக அமைந்துள்ளது.

பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு பிரச்சினைக்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்ப்பை நமது உச்ச நீதிமன்றத்தால் வழங்க முடியும் என்று இத்தீர்ப்பின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

இப்பிரச்சினை தோன்றிய நாள் முதல் எந்தெந்த விஷயங்கள் கவலை தருவதாக அமைந்தனவோ, அவை அனைத்தையும் அணு அணுவாக அலசி ஆராய்ந்து, அது குறித்து தங்கள் கருத்துகளை தெளிவுறக் கூறி, அவற்றில் உச்ச நீதிமன்றம் எந்த நிலையை கொண்டுள்ளது என்று தெளிவாக்கியுள்ளது மிக சிறப்பான ஒன்று.

உச்ச நீதிமன்றம் தன் முன் வரும் வழக்குகளை உள்ளது உள்ளபடியான உண்மைகளின் அடிப்படையில் தான் கருத்துகளைக் கவனத்தில் கொள்ள முடியுமே ஒழிய, மற்ற காரணங்களின் அடிப்படையில் சிந்திக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ராமர் பிறந்த பூமி அவருக்கே சொந்தம் என்று தெளிவுபடுத்தியதோடு நிற்காமல், எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டும் இது தொடர்பான வேறு பிரச்சினைகள் தோன்றிவிடக் கூடாது என்று அதற்கும் தீர்வு கண்டிருக்கிறார்கள்.

ராமரின் இடத்தை அவருக்கே கொடுத்ததோடு நில்லாமல், அங்கே கோயில் அமைக்கும் பணியைக் கவனிக்க மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்றதோடு, ஆலய கட்டுமானப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

சுருங்கச் சொன்னால், பல நூறு ஆண்டு காலமாக நடந்த வழக்கினை 40 நாட்களில் விசாரித்து தீர்வு தந்ததோடு, இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆயினும் இவ்விஷயத்தில் வேறு பிரச்சினைகள் வந்து விடக்கூடாதவாறு மிக கவனமாக சரியான தீர்ப்பை அளித்துள்ளார்கள்.

எத்தரப்புக்கும் பாதகமின்றி அமைந்துள்ள இத்தீர்ப்பு அனைவராலும் ஏற்கப்பட்டு வரவேற்கப்படும் காட்சியைப் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இத்தீர்ப்பால் மனநிறைவு கொள்வார்கள் என நம்புகிறேன்.

அற்புதமான இத்தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் தலை வணங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x